
பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி வருவதை யாரும் தடுக்க முடியாது
ஜனாதிபதி எந்த சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்திற்கு வருகை தந்து சபையில் உரையாற்ற முடியும்.அதனை எவராலும் தடுக்கவோ கேள்விக்குட்படுத்தவோ முடியாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ஆற்றிய உரையையடுத்து எதிர்க்கட்சித் தலைவரினால் முன்வைக்கப்பட்ட குற்றச் சாட்டுக்கள், கேள்விகள் தொடர்பில் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த பிரதமர் மேலும் கூறுகையில்,
பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரையாற்றுவதற்கு உள்ள அதே உரிமை ஜனாதிபதிக்கும் அரசியலமைப்பிற்கு இணங்க காணப்படுகிறது .அதே வேளை அரசியலமைப்பின் 32ஆவது அத்தியாயத்தின் படி எந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை தர முடியும் அந்த வகையில் பாராளுமன்ற அமர்வுகள், விசேட ஆரம்ப நிகழ்வுகள் அதனை பின்பற்றும் நிகழ்வுகளுக்கும் அவர் வருகை தரமுடியும்.
பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி, தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பி சுமந்திரன் சபையில் தெரிவித்த உண்மைக்குப் புறம்பான கூற்று தொடர்பில் தெளிவுபடுத்தல் ஒன்றையே வழங்கினார்.அவர் உரையாற்றுகையில் அனைவரும் அமைதியாக அதனைக் கேட்டுக் கொண்டிருந்தனர். ஏனெனில் அரசியல மைப்பிற்கு இணங்கவே அவர் அந்த தெளிவூட்டலை வழங்கினார்.
எனினும் அதன் பின்னர் ஜனாதிபதிக்கு அவ்வாறு உரையாற்ற முடியாது என எதிர்க் கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். ஜனாதிபதி எந்த சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்திற்கு வருகை தந்து சபையில் உரையாற்ற முடியும்.அதனை எவராலும் தடுக்கவோ கேள்விக்குட்படுத்தவோ முடியாது என்றார்.