
மட்டக்களப்பு சித்தாண்டியில் ஆர்ப்பாட்டம்; யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் கைது
மட்டக்களப்பு சித்தாண்டியில் மேய்ச்சல் தரை பண்ணையாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ் . பல்கலைக்கழக மாணவர்களில் 6 பேரை பொது போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ் .மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சித்தாண்டி முருகன் ஆலயத்துக்கு முன்னால் ஒன்று கூடி ஊர்வலமாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பண்ணையாளரின் இடம் வரை சென்று அங்கு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அந்த பகுதியில் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் முடிவுற்ற பின்னர் மாணவர்கள் பஸ்ஸில் கிழக்கு பல்கலைக்கழகத்தை நோக்கி பயணித்த போது பின்னால் சென்ற சந்திவெளி பொலிஸார் பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் வைத்து பஸ்ஸை நிறுத்தி அதில் 6 மாணவர்களை கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் சட்டவிரோத ஆர்ப்பாட்டம் மற்றும் பொது வீதி போக்குவரத்துக்கு இடையூறு விளைத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இதேவேளை, கைது செய்யப்பட்ட 6 மாணவர்களையும் நேற்று மாலை 6 மணியவில் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் அன்வர் சதாத் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது அவர்களை,ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற எல்லைக்குள் வதிவிடத்தைக் கொண்டவர்கள் மூலம்,ஒருவருக்கு தலா ஒரு இலச்சம் ரூபா பெறுமதியான ஆள் பிணையில் செல்வதற்கு அனுமதியளித்து பிணையில் விடுவித்தார்