அம்பாறையில் ஹர்த்தால் : மக்கள் அன்றாட நடவடிக்கையில்…

அம்பாறையில் ஹர்த்தால் : மக்கள் அன்றாட நடவடிக்கையில்…

வடக்கு – கிழக்கில் எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அம்பாறை மாவட்ட மக்கள் அதனை நிராகரித்து வழமையான செயற்பாட்டில் வெள்ளிக்கிழமை (20)  ஈடுபட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (20) உணவகங்கள், புடவைக்கடைகள், வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கியது.

இப்பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்துள்ள போதிலும் கற்றல் செயற்பாடு இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.

இம்மாவட்டத்தில் வழமை போன்று அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்ததை அவதானிக்க முடிந்தது. இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு ,சாய்ந்தமருது, மாளிகைக்காடு,  நிந்தவூர், அட்டப்பளம், சம்மாந்துறை மாவடிப்பள்ளி ,சவளக்கடை, மத்தியமுகாம் ,உள்ளிட்ட  முக்கிய இடங்களில் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம்  அதிகரித்து வழமை போன்று செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று பொலிஸாருடன் இணைந்து இராணுவம் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.

அத்துடன் கல்முனை பொது சந்தை  உட்பட அதனை சூழ உள்ள பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம், நிலையங்கள், சுப்பர்மார்க்கெட்டுகள், பாடசாலைகள், பாமசிகள்,  வங்கிகள், எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று திறக்கபட்டு வியாபாரம் இடம்பெற்றன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )