
வடக்கு மக்களின் வாழ்வை கட்டியெழுப்ப பூரண ஆதரவு
வட மாகாணத்தின் அபிவிருத்திக்காகவும் அம் மக்களின் வாழ்வை கட்டியெழுப்புவதற்காகவும் பூரண ஆதரவை வழங்குவதாக பிரித்தானியாவின் இந்தோ-பசிபிக்கிற்கான அமைச்சர் ஆன் மேரி பெலிண்டா ரவேலியன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி பெலிண்டா ரவேலியனுக்கும் வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்குமிடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை யாழ்.நகரில் இடம்பெற்றது.
இதன் போது வடமாகாணத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் ஆன் மேரி பெலிண்டா ரவேலியனுக்கு ஆளுநர் விளக்கமளித்தார்.
இந்நிலையில் அமைச்சர் ஆன் மேரி பெலிண்டா ரவேலியன் கூறுகையில் ,
வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். வடக்கு மக்களின் வாழ்க்கை முறையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதை காணமுடிவதால் சிறந்த எதிர்காலம் தெரிகிறது.
மேலும் வடமாகாணத்தின் அபிவிருத்திக்காகவும் மக்களின் வாழ்வை கட்டியெழுப்புவதற்கும் பூரண ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
சுமார் ½ மணிநேரம் நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பற்றிக்கும் கலந்து கொண்டார்.