
குருந்தூர் மலையில் மக்களின் காணிகளை விடுவிக்க தொல்லியல் திணைக்களம் மறுப்பு
குருந்தூர் மலைப் பகுதியிலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு தொல்லியல் திணைக்களம் மறுப்பு தெரிவித்துள்ளது.
குறித்த பகுதி தொல்லியல் முக்கியமானதாக உள்ளதால் இவ்விடத்தினை விடுவிக்க முடியாது எனவும், 2009 ஆண்டிற்கு பின்னரான காலப்பகுதிக்குள் குறித்த பகுதியில் பயிர்ச்செய்கை இடம்பெற்றுள்ளது. எனவே பயிர்ச்செய்கை செய்த இடங்களில்
பயிர்ச்செய்கை செய்யலாம் என தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் ஜெகயத்திலக்க தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கடந்த 18 ஆம் திகதியன்று இடம்பெற்ற காணிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடலில் தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையை அண்மித்துள்ள தமிழ்மக்களின் விவசாய
நிலங்களை தொல்லியல் திணைக்களம் மற்றும், வனவளத்திணைக்களம் என்பன ஆக்கிரமித்துள்ளமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இக் கூட்டத்தில் எடுக்கப்பபட்ட தீர்மானத்திற்கமைய விடுவிக்கக்கூடிய காணிகள் தொடர்பாக ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ்நீர்மல நாதன்,காதர் மஸ்தான்,செல்வம் அடைக்கலநாதன் , வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் ,தொல்லியல்திணைக்கள அதிகாரிகள்,வனவளத்திணைக்களத்தினர், காணிக்கு உரிமைகோரும் மக்கள் உள்ளிட்டோர் இன்றைய தினம் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போதே, குறித்த காணிகளை விடுவிப்பதற்கு தொல்லியல் திணைக்களம் மறுப்பு தெரிவித்துள்ளது.

