
அபகரிப்புக்கள் ,ஆக்கிரமிப்புக்கள் மூலம் வடக்கு கிழக்கில் மௌன யுத்தம்
இந்த நாட்டில் தமிழ் மக்களின் விகிதாசாரத்தை குறைக்கவேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு1949 ம் ஆண்டு, முதல் பிரதமரான டி.எஸ்.சேனநாயக்கா கிழக்கு மாகாணத்திலே கல்லோயா குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்த காலம் தொடக்கம் இன்று வரை தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு வருவதுடன் அவற்றில் சிங்களக் குடியேற்றங்களும் பெளத்த மயமாக்கலும் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.வடக்கு கிழக்கில் தற்போது நடந்து கொண்டிருப்பது ஒரு மௌன யுத்தம் என பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா உள்ளிட்ட தியாகிகளின் 33வது நினைவு அஞ்சலி நேற்று முன்தினம் சனிக்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது.இதில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்
இங்கு அவர் மேலும் பேசுகையில்,
தமிழ் மக்கள் ஆயுத போராட்டத்தை விரும்பிஏற்றுக் கொண்டவர்கள் அல்ல ஆயுத போராட்டம் எங்கள் மீது திணிக்கப்பட்டது.இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து தமிழினம் இரண்டாம் தர பிரஜைகளாக்கப்பட்டோம் .
இவ்வாறு, தனி சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டதில் இருந்து தமிழர்களுக்கு எதிராக 1957, 1958, 1978 ல் அரங்கேற்றப்பட்ட கலவரங்களை தொடர்ந்து மிகவும் மோசமாக 83 கலவரத்தை உருவாக்கி,வட கிழக்கிற்கு சொந்த நாட்டிலேயே தமிழர்கள் கப்பல்கள் மூலம் அகதிகளாக அனுப்பப்பட்டமை வரலாறு ஆகும்.
இந்த நிலையில் 83 கலவரத்தை அடுத்து ஈழ விடுதலைப் போராட்டம் ஒரு வித்தியாசமான பாதைக்குள் சென்று ஆயுதப் போராட்டமாக மாறியது.
ஜே,ஆர். ஜெயவர்த்தனா காலத்திலே சமாதனப் பேச்சுக்கே இடமில்லாமல் தமிழ் மக்களின் குரல்வளையை நசுக்கினார். 2009 வரை தமிழ் மக்களை வஞ்சித்துக் கொண்ட அரசுகள் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின் வடகிழக்கில் வித்தியாசமான ஒரு திணிப்பை செய்துவருகின்றன.
அதுதான் தமிழர் தேசத்தில் விகாரைகள் அமைக்கவேண்டும், தமிழரின் குடிபரம்பலை மிக வேகமாக மாற்றி அமைக்கவேண்டும், இணைந்திருந்த வடகிழக்கை வெலிஓயா குடியேற்றம் மூலம் நில தொடர்பற்ற மாகாணங்களாக இரண்டு மாகாணங்களையும் பிரிப்பது போன்ற நடவடிக்கையை திட்டமிட்டுஅரங்கேற்றப்பட்டு வருகின்றன.
தற்போதைய எதிர்கட்சி தலைவாரான சஜித் நல்லாட்சி காலத்தில் புத்தசாசன அமைச்சராக இருந்தபோது வடகிழக்கில் ஆயிரம் விகாரைகளை அமைக்கவேண்டும் என்றார்.தற்போது இலங்கையிலே ஆயிரம் தாது கோபுரங்களை படிப்படியாக அமைக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.
ஆகவே தற்போது வடகிழக்கில் நடந்து கொண்டிருப்பது ஒரு மௌன யுத்தம் தமிழ் மக்களின் காணிகள் அபகரிப்பு, தமிழர் பிரதேசங்கள் எங்கும் விகாரைகள் என முனைப்புடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக உயர்ந்த பகுதிகள்(சிறிய மலைகள் குன்று
களில்) விகாரைகள் அமைக்கப்பட்டு,இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை பறைசாற்றுவதற்காக இந்த திட்டங்களை செய்து வருகின்றனர்.
நாடு சுதந்திரமடைந்த காலத்தில் இருந்தே தமிழர்கள் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். பண்டா- செல்வா ஒப்பந்தம், டட்லி -செல்வா ஒப்பந்தம், மற்றும் திம்பு பேச்சுவார்த்தை,1990களின் நடுப்பகுதியில் பேச்சுவார்த்தை ,2002ல் பேச்சுவார்த்தை எனத் தொடர்ந்து 2009 பின் மகிந்தவுடன் 18 சுற்று பேச்சுவார்த்தை உட்பட தற்போதும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கின்றது
1987 இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது அதன் மூலம் உருவாகிய குறைமாத குழந்தையான மாகாணசபை முறைமை ஏற்படுத்தப்பட்டது. இதற்காக 13 ஆவது திருத்த சட்டத்தை சட்டத்தை முற்று முழுதாக தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கான தீர்வாக யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
1987 இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது அதன் மூலம் உருவாகிய குறைமாத குழந்தையான மாகாணசபை முறைமை ஏற்படுத்தப்பட்டது. இதற்காக 13 ஆவது திருத்த சட்டத்தை சட்டத்தை முற்று முழுதாக தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கான தீர்வாக யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
தற்போதைய ஜனாதிபதி ஒரு சர்வதேச அழுத்தத்தின் மத்தியிலே இந்த நாட்டை நடாத்துகின்றார். அதற்கு மத்தியிலும் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு வருவதுடன் அவற்றில் சிங்களக் குடியேற்றங்களும் பெளத்த மயமாக்கலும் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.வடக்கு கிழக்கில் தற்போது நடந்து கொண்டிருப்பது ஒரு மௌன யுத்தம் எனவும் தெரிவித்தார்.

