
எலும்புக்கூடுகள் நிறைந்த மண்ணில் வாழ்கின்றோம்
மனித எலும்புக்கூடுகள் நிறைந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பதாக மனித உரிமைச் செயற்பாட்டாளர் பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வியாழக்கிழமை இடம்பெற்ற, பாரிய மனிதப் புதைகுழிகள் குறித்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் பேசுகையில்,
நாங்கள் எலும்புக்கூடுகள் நிறைந்த மண்ணில் வாழ்கின்றோம் உலகிலேயே அதிகளவானவர்கள் காணாமல்போன நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் இருப்பதாக ஐ.நா. தெரிவிக்கின்றது.
நாங்கள் உயிரிழந்வர்களை கௌரவித்து அவர்களை மரியாதையாக வழி அனுப்பி வைக்கும் இனத்தை சேர்ந்தவர்கள். ஆனால், இலங்கையின் பல பகுதிகளில் காணப்படும் பாரிய மனிதப் புதைகுழிகளில் உள்ள ஆயிரக்கணக்கான எலும்புக்கூடுகளின் மத்தியில் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
கடந்த காலங்களில் இலங்கை தனது தேயிலைக்காக பெயர் பெற்றது தற்போது, அதிகளவானோர் காணாமல்போன இரண்டாவது நாடு என்ற பெயரை பெற்றுள்ளது எனவும் பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதேவேளை, மனித உரிமைகள் அபிவிருத்திக்கான நிலையம் காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்கள் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பு ஆகியன இணைந்து, “பாரிய மனிதப் புதை குழிகளும் தோற்றுப்போன அகழ்வுகளும்” என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.
இலங்கையின் தென்பகுதியில் கிளர்ச்சி இடம்பெற்றும் வடபகுதியில் மோதல்கள் இடம்பெற்றும் 30 வருடங்களாகின்ற நிலையில் நாட்டின் பல பகுதிகளில் 20 க்கும் மேற்பட்ட மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

