
டெலிகொம் தொடர்பான சரத் வீரசேகரவின் பரிந்துரையை நிராகரித்த அரசாங்கம்
இலங்கை டெலிகொம் நிறுவனத்தை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டாம் என தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற கண்காணிப்பு தெரிவுக்குழு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பு தெரிவுக்குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது தேசிய பாதுகாப்புக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், அதனை அனுமதிக்க வேண்டாம் என அறிக்கையில் பரிந்துரைத்து அதனை நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
இந்த நிலையில் இலங்கை டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவது என அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவை எடுத்துள்ள நிலையில், கண்காணிப்பு தெரிவுக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளாது என ஆளும் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையில் டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்த வேண்டாம் என தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற கண்காணிப்பு தெரிவுக்குழு முன்வைத்துள்ள பரிந்துரையை அரசாங்கம் நிராகரித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கண்காணிப்பு தெரிவுக்குழுவின் அறிக்கையின் பிரதி நேற்றைய தினமே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பி வைக்க ஆளும் கட்சியின் அமைப்பாளரின் அலுவலகம் நடவடிக்கை எடுத்திருந்தது.

