மதிப்பிற்குரிய பெருந்தளபதியின் நினைவுகள் சுமந்து….!!

மதிப்பிற்குரிய பெருந்தளபதியின் நினைவுகள் சுமந்து….!!

சொர்ணம் அண்ணா!
இந்தப் பெயரில்தான் எத்தனை மிடுக்கு.
பள்ளிப் பருவங்களில் நாங்கள் புகைப்படங்களில் பார்த்து வியந்த கதாநாயகன். ஒரு முறையேனும் கதைத்து விட மாட்டோமா என ஏக்கம் கொண்டிருந்தோம். இவர் உலகமே வியந்து போற்றும் தேசியதலைவரை பாதுகாக்கும் பணியை, பொறுப்புடன் ஏற்று சிறப்புடன் திறம்பட கடமையாற்றிய தளபதி. அவருக்கே உரிய மிடுக்குடன் கூடிய நடையும், தோற்றமும், என்னைப்போல் பலரையும் கவர்ந்தன.

நான் என் கல்வியை முடித்து, குறிப்பிட்ட வேலைத் திட்டங்களைச்
செய்து கொண்டு 1998 இல் தாயகம் சென்றேன். அது ‘ஜெயசிக்குறு’ சமர் நடந்த காலமாகும். இராணுவம் ஒட்டிசுட்டான் வரை முன்னேறி இருந்தது.
இதே வேளை, பெயரிடப்படாமலே ஓயாத அலை மூன்றின்
ஆரம்ப வேலைகள் தொடங்கப்பட்டன. இராணுவத்தின் அடுத்த நகர்வு ஒட்டிசுட்டான் – புதுக்குடியிருப்பு வீதியென கணிக்கப்பட்டதால்,
ஒட்டிசுட்டான் முக்கிய தளமாக இருந்தது. இதன் பொறுப்பு சொர்ணம் அண்ணாவிற்கு வழங்கப்பட்டது.

ஓயாத அலை 3 இன் எதிர்சமர் இங்கிருந்தே ஆரம்பமானது. இச் சமரின் தொடக்க வேலைகளைச் செய்து, ஒட்டிசுட்டானை உடைத்து, எதிரிகளை
ஓட ஓட விரட்டி பெரும் வெற்றிக்கு சொர்ணம் அண்ணாவே வழி வகுத்தார் என்பதையும் நான் அறிந்தேன்.

ஆண்டுகள் மெதுவாக கடந்து, 2002ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் தேசியத் தலைவரால் சொர்ணம் அண்ணனுக்கு நான் அறிமுகம் செய்யப்பட்டேன். ஒரு முறையாவது சந்திக்க மாட்டோமா என நினைத்த தளபதியுடன் நெருங்கிப் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்ததில் பெருமகிழ்வும் பெருமிதமும் கொள்கிறேன்.

வான்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அண்ணாவின் வீரச்சாவின் பின் வான்புலிகள், தலைமையில் ஒரு வெற்றிடம் உருவானது. எமது படையணி பெரு வளர்ச்சி நோக்கிப் பயணித்த காலம் அது. இக் காலத்தில் கேணல் சங்கர் அண்ணாவின் இழப்பு பேரிழப்பாகும்.
இதனால் வான்புலிகளை தொய்வில்லாமல் கொண்டு செல்ல வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது. தேசியத் தலைவரின் பணிப்பிற்கமைய, மிகவும் திறன்பட செயலாற்றும் சொர்ணம் அண்ணா வான்புலிகளின் சிறப்புத் தளபதியாக நியமிக்கப்படுகிறார். காடு சார்ந்த இடங்களில் எம் பணி நடைபெற, அவரது முன்னனுபவங்கள், வழிகாட்டல்கள் எமக்கு பாடமாகவும் வரப்பிரசாதமாகவும் அமைந்தன என்றே சொல்லலாம்.

தேசியத் தலைவருடன் நெருங்கிப் பயணித்து அவர் சிந்தனைகளுக்கு
செயல் வடிவம் கொடுக்கும் தளபதியுடன் பயணிக்கும் வாய்ப்பை
நோக்கிச் சென்றேன் நான். புதுக்குடியிருப்பிலுள்ள அவரது தளத்திற்கு சென்ற என்னை அவரே வரவேற்று, விருந்துபசாரம் செய்து வெளிநாட்டு நிலவரங்களைக் கேட்டு அறிந்து கொண்டார்.

சொர்ணம் அண்ணா, தேசியத் தலைவர் கையளித்த வான்புலிகளின் பொறுப்பை கேணல் சங்கர் அண்ணா விட்ட இடத்திலிருந்து நிரப்பி,
அடுத்த கட்ட நகர்வுக்கு நம்மை சிறப்புடன் கொண்டு சென்றார். அவரது ஆளுமை போன்ற விடயங்களை அவரிடமிருந்து நாம் கற்றுக் கொண்டோம்.

வான்புலிகள் காட்டில் இயங்கிக் கொண்டிருந்த நிலையில், விமானங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தி, நெருக்கடியான நேரங்களில் எவ்வாறு செயற்பட வேண்டுமென அதையும் செயல்வடிவில் தெளிவாக நமக்கு கற்றுத் தந்தார் அவர்.

பெரும் தரைச் சண்டைகளை திறம்பட நடாத்தும் வல்லமை மிக்க தளபதிக்கு, ஆகாய தரைச் சமர்களை ஒழுங்கமைத்து நடாத்த வான்படை சார்ந்த அறிவையும் பெற வேண்டி இருந்தது. அத்துடன் வான்புலிகளின் போராளிகளை, சீர்படுத்தி ஒப்படைக்கும் பொறுப்பையும் சொர்ணம் அண்ணரே ஏற்றிருந்தார்.

ஒரு நாள் எனையழைத்து ‘நான் தொடர்ந்து இப் பொறுப்பில் இருக்க மாட்டேன். எனக்கு வேறு பொறுப்புக்கள் உள்ளன. நீங்கள் இதனை தெளிவாகக் கற்றுக் கொள்ளுங்கள்’ என்றார். போராளிகளின் பாதுகாப்பு, மனங்கள் தொய்வடையாமல் பார்த்துக் கொள்வது போன்ற நிர்வாக முறைகளை செவ்வனே கற்று தந்தார். ஒரு நாள் என்னை மணலாற்றுக் காட்டிற்கு அழைத்துச் சென்று தளபதி பால்ராஜ் அண்ணாவை நோக்கி ‘லீமா! இவர் யாரென்று தெரியுமா? இவர் தான் எனக்கு அடுத்து வான்புலிகளை பொறுப்பேற்கப் போகிறார்’ என்று அறிமுகம் செய்தார். பின் இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் தேசியத்தலைவர் தங்கியிருந்த இடத்தைக் காட்டி, மிகவும் அக்கறையுடன் சம்பவங்களை விளக்கினார். எமக்கு யார்யாரை அறிமுகம் செய்து வைக்க வேண்டுமோ அவர்களையெல்லாம் அறிமுகம் செய்து வைத்து, உறுதுணை மிக்க தளபதியாக விளங்கினார்.

காட்டை மிகவும் அறிந்தவரான சொர்ணம் அண்ணா எமது ஓடு தளத்திற்கான பாதையாக இரணைமடுவுக்கு கிழக்காகவும், வட்டக்கச்சி பழைய கண்டி வீதியையும் தேர்ந்தெடுத்தார். இது சண்டை தொடங்கினால்
நகர்விற்கு இலகுவானதாகவும் இருந்தது. ஓடுதளம் அமைக்கும் பணி நன்றாக நடந்து கொண்டிருந்தது. நான் மீண்டும் வெளி வேலையாக அனுப்ப பட்டிருந்தேன். அப்போதுதான் துரோகி கருணாவின் பிளவு ஏற்பட்டது.

அத் துரோகச் செயலை முறியடித்து இயக்கத்தை மீட்டுவர
கிழக்கிற்கு அனுப்பப்படும் பொறுப்பையும் தேசிய தலைவர் அவர்கள் சொர்ணம் அண்ணாவிற்கே வழங்கினார். எங்கெல்லாம் தேசியத் தலைவர் நெருக்கடியான சிக்கல்களுக்கு முகம் கொடுக்கின்றாரோ, அங்கெல்லாம் 55 (five five) இன் குரல் முழங்கும். அதுதான் சொர்ணம் அண்ணாவின் திறன்.

தன்னுடன் நின்ற சில போராளிகளை வான்புலியில் விட்டு விட்டு, ஒரு குறிப்பிட்ட போராளிகளுடனே திருகோணமலை சென்றார் சொர்ணம் அண்ணா. சில காலம் கடந்த பின், தேசியத் தலைவரது பணிப்பின் பேரில், வட்டக்கச்சி தளத்தில் வைத்து, சிறந்த கட்டமைப்பாகவிருந்த
வான்படை என்னிடம் கையளிக்கப்பட்டது. தனது வாகனம் ஒன்றையும் எனக்குத் தந்த சொர்ணம் அண்ணா ‘பறந்து காட்டுங்கள். உங்கள் காட்டில் மழை பெய்யும்’ எனத் தட்டிக் கொடுத்தார். “என்ன உதவியென்றாலும் அழையுங்கள். செய்து தருகிறேன்’ எனக் கூறி, மீண்டும் திருகோணமலை சென்றார். அடிக்கடி எனையழைத்து நிலவரங்களைத் தெரிந்து
கொள்வார்.

அன்ரன் பாலசிங்கம் அண்ணா இறுதியாக ஈழம் வந்த போது என்னை அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார் அவர்.
ஈழத்தின் பெரும் தளபதிகள் ஒன்று கூடிய இடத்தில் என்னையும்
வான்புலிகளின் சிறப்பு தளபதியாக அறிமுகம் செய்து பெருமைப் படுத்தினார். நான் நன்றி உணர்வோடு அவரை நினைக்கிறேன்.
தமிழீழ வரலாற்றில் பெரும் கதாநாயகனாக திகழ்ந்த சொர்ணம் அண்ணாவுடன் பயணித்த அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.

வாழ்வா? சாவா? என்று நம்தேசம் களம் கண்டு கொண்டிருந்த நாளில் தன் மூத்த மகளையும் தானே கொண்டு போய் தேசத்திற்கான பெரும் பணியில் இணைத்து விட்டு, அதே மிடுக்குடன் நடந்த வீரத் தந்தையாக இருந்தவர் சொர்ணம் அண்ணா. அப்பாவும், மகளுமாய் ஒரே காலக்கட்டத்தில்
நாட்டுக்காய் பணி செய்து மடிந்த வீர காவியங்களை வடித்த புகழ் பூத்த பூமி எம் தாய் நிலம்.

எம் வீரத்தளபதிக்கும், மகளுக்கும் வீரவணக்கம். தம் குடும்பத்தை விடுத்து, தாய் மண்ணையும், தேசியத் தலைவரையும் நேசித்து முள்ளிவாய்க்காலிலும், தாய் மண்ணிலும் தமது இலட்சியப் பாதையில் வீர காவியமான தளபதிகளையும், போராளிகளையும் நெஞ்சில் நிறுத்தி
நாம் ஒற்றுமையாய் உண்மைக்காய் குரல் கொடுப்போம்.

 -அ.வி.முகிலினி.

(முன்னாள் வான்புலிகளின் சிறப்புத் தளபதியிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் ஆதாரத்துடன் எழுதப்பட்டது.)

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )