
தெனியாய மொறவக்க பகுதியில் தமிழர்களின் பயிர்கள் வெட்டி அழிப்பு
தெனியாய – மொறவக்க பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து வரும் பகுதியில், அவர்கள் வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்பட்ட வாழைமரங்களை அழிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதியானது தனியாருக்கு சொந்தமான பெருந்தோட்டம் என்பதுடன், பௌத்த பிக்கு ஒருவர் அதன் உரிமையாளராக உள்ளார்.
தெனியாய – மொறவக்க பகுதியில் வாழும் மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக வாழைமரங்கள் உள்ளிட்ட பயிர்களை வளர்த்து தமது வாழ்வாதாரத்தை நடத்தி வந்துள்ளனர்.
அவர்கள், அறுவடைசெய்த வாழைக்குலைகளை விற்பனை செய்ய எடுத்துச் செல்லும் போது, அதற்கு தோட்ட உரிமையாளர் தரப்பில் மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வாழைமரங்களின் அறுவடைகளை பெற்றுக்கொள்வதற்கான உரிமை கிடையாது என, அந்த மரங்களை வளர்த்தவர்களிடம், தோட்ட நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில், சிலர் இந்தப் பகுதிக்கு வந்து, அங்கிருந்த அனைத்து வாழை மரங்களையும் வெட்டிச்சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில், மொறவக்க பொலிஸ் அதிகாரியிடம் ‘ஹிரு’ செய்திப் பிரிவு வினவிய போது, இந்தச் சம்பவம் இருதரப்பினருக்கும் இடையில் சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
இங்கு வாழைமரங்கள் அழிக்கப்பட்டது தோட்ட நிர்வாகத்தின் தவறு என்றும், அவற்றுக்காக பாதிக்கப்பட்ட மக்களின் ஒரு குடும்பத்திற்கு தோட்ட நிர்வாகத்தினால் 20 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்கப்படும் எனவும் தோட்ட நிர்வாகம் அறிவித்தாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், இந்தச் சம்பவத்தில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.