இனப் படுகொலை நடக்கவில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு ஏன் அஞ்சுகின்றீர்கள்

இனப் படுகொலை நடக்கவில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு ஏன் அஞ்சுகின்றீர்கள்

இலங்கை தொடர்பில் கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வெளியிட்ட பதிவுகளை மதிக்கிறோம்.இலங்கையில் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்படவில்லை என்றால், இரசாயன குண்டுத்தாக்குதல் நடத்தப்படவில்லை என்றால் ஏன் சர்வதேச விசாரணைக்கு இலங்கை அச்சப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ்.ஸ்ரீதரன் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பந்தய சூதாட்ட விதிப்பனவு திருத்த சட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய ஸ்ரீதரன் எம்.பி. மேலும் பேசுகையில்,

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் கனடாவின் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வெளியிட்ட கருத்தை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளது.ஆனால் இலங்கை தொடர்பில் கனடா பிரதமரின் கருத்தை நாம் மதிக்கிறோம்.

கனடாவின் பிரதமர் வெளியிட்ட கருத்து தொடர்பில் இலங்கையில் உள்ள உயர்ஸ்தானிகரிடம் வெளிவிவகாரத்துறை அமைச்சர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.கனடா பிரதமரின் கருத்து இந்த நாட்டில் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் நாட்டில் இன முரண்பாடு உள்ளது என்பதை வெளி விவகாரத்துறை அமைச்சர் ஏற்றுக் கொண்டுள்ளார். இராணுவத்தினரிடம் பிள்ளைகளை ஒப்படைத்தோம்,எமது பிள்ளைகளை தாருங்கள் என பாதிக்கப்பட்ட மக்கள் கோருவது நியாயமானதே இதனை எவ்வாறு பிரிவினைவாதம் என்று குறிப்பிட முடியும்.

காணாமல்போனார் விவகாரத்திற்கு ஒரு சிறந்த தீர்வை பெற்றுத் தருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.இதனையே ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் அனைவரும் குறிப்பிடுகிறார்கள்.இலங்கை ஆட்சியாளர்கள் சர்வதேசத்தை ஏமாற்றுகிறார்கள்.இதன் காரணமாகவே சர்வதேசம் இலங்கையை தொடர்ந்து வலியுறுத்துகிறது.

உண்மையை கண்டறிவதாக சர்வதேசத்துக்கு இலங்கை வாக்குறுதி வழங்கியது. அதனையே சர்வதேசம் இன்று கோருகிறது.

யுத்தக் குற்றம் இடம்பெறவில்லை,தமிழ் மக்கள் இனப் படுகொலை செய்யப்படவில்லை என்றால் ஏன் சர்வதேச விசாரணைக்கு அச்சப்பட வேண்டும். அஞ்ச வேண்டிய தேவையில்லையே.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் பிரித்தானியா,அமெரிக்கா உட்பட கரிசணை கொள்ள வேண்டும்.தமிழர்கள் மீது படுகொலை கட்டவிழ்க்கப்படவில்லை, இரசாயன குண்டுத்தாக்குதல் பிரயோகிக்கப்படவில்லை என்றால் அரசாங்கம் சர்வதேச பொறிமுறை விசாரணைக்கு கதவைத் திறக்கலாம்.

இறுதிக் கட்ட யுத்தத்தில் பசியால் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் மரணித்ததை ஒருபோதும் மறுக்க முடியாது.இந்த நாட்டில் பாரிய இன அழிப்பு இடம்பெற்றுள்ளது என்பதை சர்வதேச ஊடகவியலாளர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.ஆனால் அரசாங்கம் மாத்திரம் தான் 2009 ஆம் ஆண்டு முதல் இருந்த இடத்தில் இருந்து நகராமல் இருக்கிறது.இறுதிக் கட்ட யுத்தத்தில் இரசாயனக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பதை பலர் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்கள், பலர் சாட்சியமளித்துள்ளார்கள்.

மறைக்கப்பட்ட உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.உள்ளக பொறிமுறையில் தீர்வு கிடைக்காது என்பதற்காகவே தொடர்ந்து போராடுகிறோம்.யுத்தத்தால் அழிந்தவர்கள் நாங்கள். எம்மை அழித்தவர்கள் நீதிபதிகளாக இருந்து செயற்படும் போது எவ்வாறு எமக்கான நீதி கிடைக்கும்?

அழிக்கப்பட்ட எம் உறவுகளை நிம்மதியாக வாழ இடமளிக்காத வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த ஆக்கிரமிப்புக்கள் தீவிரமடைந்துள்ளன.எம்மை நிம்மதியாக வாழ விடுங்கள் என்பதையே தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.பாதிக்கப்பட்ட எமக்கு அரசியலமைப்பு ஊடாக தீர்வு தாருங்கள் என்பதையே கோருகிறோம்.

தமிழர்கள் மீது இன அழிப்பு கட்டவிழ்க்கப்பட்டது என்று மன்னிப்பு கோரும் நாளில் தான் இந்த நாட்டில் நீதி நிலைக்கும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )