
சஜித்துக்கு தெரியாமல் ரணிலை சந்திக்கும் எதிரணி
எதிர்க்கட்சியில் உள் ளவர்கள் இரகசியமாக வந்து ஜனாதிபதியை அடிக்கடி சந்திக்கின்றனர் என்றும், இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் அறிந்துள்ளாரா என்று தெரியவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே டயனா கமகே இதனை தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
கடந்த காலங்களில் நடந்த விடயங்கள் தொடர்பில் கதைத்துக்கொண்டிருப்பதால் எந்த பிரயோசமும் இல்லை. சிலரின் தீர்மானங்களால் நாடு இவ்வாறான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதில் இருந்து நாங்கள் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் மீண்டும் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல பாதையை அமைக்கப் போகின்றோமோ? அல்லது இந்த பாதையில் முறையான கொள்கைத் திட்டங்களுடன் நாட்டை கட்டியெழுப்பப் போகின்றோமா என்று சிந்திக்க வேண்டும்.
நாட்டை அனைவரும் ஒன்றிணைந்து மேலே கொண்டு வருமோம் என்று ஜனாதிபதி எப்போதும் இங்கு அழைப்பு விடுக்கின்றார். ஆனால் குறிப்பிட்ட சிலரே அவருடன் பேசுகின்றனர். இதனை எதிர்க்கட்சித் தலைவர் அறிந்துள்ளாரோ தெரியவில்லை. திருட்டுத் தனமாக வந்து அவர்கள் பேசுகின்றனர்.
இதேவேளை என்னை இந்த பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற சிலர் முயற்சிக்கின்றனர். ஒருவர் என்னைப்பற்றி கூறிக்கொண்டிருந்தார். அவர் நகர மேயர் பதவி ஆசையில் சென்றார். ஆனால் இப்போது எம்.பி பதவியும் இன்றி மேயர் பதவியும் இன்றி இருக்கின்றார். அடுத்தவரை தடியால் அடிக்க முற்படும் போது நமக்கு உலக்கையால் அடி விழும் என்பது இதனையே என்றார்.

