
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நாளை நினைவேந்தல்; பேதங்களை கடந்து ஒன்றிணையுமாறு அழைப்பு
இன்றுவரை நீதி வழங்கப்படாத இனப்படுகொலையின் 13 ஆம் ஆண்டிற்கான நினைவேந்தல் நாளை (18) முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறும் என்றும், அனைவரும் வேற்றுமைகளைத் துறந்து, சுயவிளம்பரப்படுத்தல்களைக் கடந்து ஓர்பொது நிகழ்ச்சிநிரலில் தமிழர்கள் என்ற ரீதியில் இந்த நினைவேந்தலில் ஒன்றிணையவேண்டும் என்றும் நினைவேந்தலை ஏற்பாடு செய்திருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்டமைப்பினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கை அரசாங்கம் கடந்த 2009 ஆம் ஆண்டு இதே தினங்களில் ஈழத்தமிழர்களை மிகமோசமான முறையில் அழித்து, இனவழிப்பை மேற்கொண்டது.
இன விடுதலைக்காகப் போரிட்ட தமிழினத்தை இலங்கையின் அரச பயங்கரவாதம் சர்வதேச சமூகத்தினால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும், போர்முறைமைகளையும் பயன்படு;த்திக் கொன்றொழித்ததை உலகின் வல்லாதிக்க நாடுகள் வெறுமனே வேடிக்கை பார்த்ததுடன், மறைமுகமான ஆதரவையும் வழங்கின.
பாதுகாப்பு வலயங்கள் என்று அரசாங்கத்தினால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சமடைந்த அப்பாவி மக்களையும், காயமடைந்து வைத்தியாசாலைகளில் அனுமதிக்கப்பட்ட மக்களையும் இராணுவம் குண்டுகளைவீசிக் கொன்றொழித்தது. அப்போது ஐக்கிய நாடுகள் சபையும் ஏனைய தொண்டு நிறுவனங்களும் இலங்கையில் தமது பிரசன்னத்தை நிறுத்திக்கொண்டன.
போதிய உணவுப்பொருட்களையும், காயமடைந்தவர்களுக்கான மருந்துப்பொருட்களையும் அனுப்பிவைக்காமல் இலங்கை அரசாங்கத்தினால் மிகக்குரூரமான முறையில் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பை சர்வதேசம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் இன்றுவரை நீதி வழங்கப்படாத இனப்படுகொலையின் 13 ஆம் ஆண்டிற்கான நினைவேந்தல் நாளை புதன்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறும்.
எனவே அனைவரும் வேற்றுமைகளைத்துறந்து, சுயவிளம்பரப்படுத்தல்களைக் கடந்து எமது பொது நிகழ்ச்சிநிரலில் தமிழர்கள் என்ற ரீதியில் இந்த நினைவேந்தலில் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன் நாளை மாலை 06.00 மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் மணி ஒலி எழுப்புவதுடன், இயலுமானவரை முள்ளிவாய்க்கால் கஞ்சியையும் பரிமாறி தமிழின அழிப்பினை நினைவுகூருவோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.