
பாராளுமன்றம் ஒத்திவைப்பு!; பெப்ரவரி 8 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்
பாராளுமன்றத்தின் தற்போதைய கூட்டத் தொடரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 33ஆவது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதியினால் 9 ஆவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வர்த்தமானியை வெளியிடுவதற்கு வெள்ளிக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி ஜனவரி 27 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற கூட்டத் தொடரை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், புதிய கூட்டத் தொடரை பெப்ரவரி 8 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இறுதியாக நடந்த பாராளுமன்ற அமர்வின் போது பெப்ரவரி 7 ஆம் திகதி அடுத்த கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஜனாதிபதி பாராளுமன்றத்தின் தற்போதைய கூட்டத் தொடரை முடிவுக்கு கொண்டு வர தீர்மானித்துள்ளதால் அன்றைய தினத்தில் பாராளுமன்றம் கூடாது அதற்கு மறுநாள் கூடவுள்ளது.
இதன்போது புதிய கூட்டத் தொடர் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டு அவரால் சிம்மாசன உரை நிகழ்த்தப்படும்.
தேசியப் பிரச்சினைக்கான தீர்வுகள், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதி உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

