
எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை சர்வ கட்சிக் கூட்டத்தில் ரெலோ பங்கேற்காது
காணி விடுவிப்பு ,அரசியல் கைதிகளின் விடுதலை என்ற எமது கோரிக்கைகளை நிறைவு செய்தால் மட்டுமே எதிர் வரும் காலங்களில் நடைபெற இருக்கும் சர்வ கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வோம் என ரெலோ தலைவரும் வன்னி மாவட்ட எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்த-அவர் மேலும் கூறுகையில்
தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தொடர்பாக இன்று (நேற்று) வியாழக்கிழமை ஜனாதிபதி தலைமையில் நடை பெற்ற சர்வ கட்சி கூட்டத்தில் நானும் புளொட் தலைவர் சித்தார்த்தனும் கலந்து கொள்ளவில்லை.
கடந்த காலங்களில் ஜனாதிபதியால் வாக்குறுதி அளித்த விடயங்களான நில அபகரிப்பு மற்றும் சிறைக்கைதிகள் விடுதலை போன்ற பல விடயங்களை அரசாங்கம் சரியாக நடைமுறைப்படுத்தாத காரணத்தால் நாங்கள் சர்வகட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
நாங்கள் ஏற்கனவே கேட்டுக் கொண்ட விடயங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதியிடம் மீண்டும் கோரிக்கை விடுக்கின்றோம்.
தமிழ் மக்கள் சார்பாக நாங்கள் கேட்ட விடயங்கள் நிறை வேற்றப்படுமாக இருந்தால் இனி வரும் ஏனைய சர்வகட்சி கூட்டங்களில் நாங்கள் கலந்து கொள்ள தயாராக இருக்கிறோம்.
இது தொடர்பாக ஜனாதிபதியை நேரில் சந்தித்து கூற இருக்கின்றோம்.
ஜனாதிபதி உத்தரவிட்டும் கூட வன வள திணைக்களம் தங்களுடைய செயற்பாடுகளை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நில அபகரிப்புகள் நிறுத்தப்பட வேண்டும். அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்பட வேண்டும்.
ஏற்கனவே கடந்த பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணத்தில் வந்து வாக்களித்த பொதுமக்களின் 108 ஏக்கர் காணி இன்னும் விடுவிக்கப் படவில்லை. ஆகவே அதை எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன் வைக்கின்றோம் என்றார்.

