தேர்தலை இடைநிறுத்த அரசின் இறுதி முயற்சி;  வீதிக்கிறங்கி கூட்டுச் சூழ்ச்சியை தோற்கடிப்போம்

தேர்தலை இடைநிறுத்த அரசின் இறுதி முயற்சி; வீதிக்கிறங்கி கூட்டுச் சூழ்ச்சியை தோற்கடிப்போம்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை இடைநிறுத்துவதற்கான இறுதி முயற்சியாகவே தேர்தல் செலவீனத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. கட்டுப்பணம் செலுத்தப்பட்டு வேட்புமனுத்தாக்கல் செய்யப்படும் நிலையில் தேர்தல் இடைநிறுத்தப்பட்டால் வீதிக்கிறங்கி அந்த சூழ்ச்சியை தோற்கடிப்போம் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச சூளுரைத்தார்.

அத்துடன் தேர்தல் செலவீனத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் சிறந்தது. ஆனால் அது கொண்டுவரப்பட்ட நேரம் தவறானது எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர் இந்த சட்டமூலம் தற்போது நடக்கவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு பொருந்தாது என்ற திருத்தத்தைக் கொண்டு வரத்தயாரா ?இந்த சட்டமூலத்தால் உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தல் இடைநிறுத்தப்படாது என பிரதமரால் எழுந்து உறுதிவழங்க முடியுமா என அவர் கேட்டபோதும் பிரதமரோ விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரோ பதிலளிக்காது அமைதியாக இருந்தனர்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற தேர்தல் செலவீனத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் பேசுகையில்,

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை இடை நிறுத்துவதற்கான இறுதி முயற்சியாக ,கூட்டுச் சதியாக தேர்தல் செலவீனத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு முதல் இந்த தேர்தலை இடைநிறுத்த எல்லை நிர்ணய குழு என்ற சூழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது. இதன்மூலம் உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவாகும் 8000 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையை 4000 ஆக குறைக்க வேண்டும் என்ற சதி முன்னெடுக்கப்பட்டது. இரண்டாவதாக இந்த தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக பிரசாரம் செய்யப்பட்டு சதி முன்னெடுக்கப்பட்டது. மூன்றாவதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் , உறுப்பினர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு அழைக்கப்பட்டு ஆவணங்கள், குறிப்புக்கள் ஒரு கட்சியின் தலைவரான ஜனாதிபதியினால் ஆராயப்பட்டன.

இதனால் தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீனம் இல்லாது செய்யப்பட்டது. ஜனநாயகம் மீறப்பட்டது.

நான்காவதாக தேர்தலை நடத்த பணம் இல்லையென்ற கதை அவிழ்க்கப்பட்டது. இது அப்பட்டமான பொய். தேர்தலை நடத்த 1000 கோடி ரூபா தேவைப்பட்ட நிலையில் அதனை விட 27 மடங்கு பணம் அச்சிடப்பட்ட நிலையில் எப்படி பணம் இல்லாது போகும்? அதுமட்டுமன்றி 39 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில அமைச்சர்கள், நியமிக்கப்படவுள்ள நிலையில் அரசு பணம் இல்லையென கூற முடியுமா? தேர்தலை நடத்த பணம் இல்லைஎனக்கூறும் அரசு வெளிநாட்டு கடன்களுக்கான வட்டியை செலுத்தியுள்ளது. அத்துடன் ஜனாதிபதி மாளிகையை ஜெயவர்தனபுர கோட்டைக்கு மாற்றவுள்ளது. இதற்கு எங்கிருந்து பணம் வந்தது?

ஐந்தாவது முயற்சியாக மாகாணசபைகள் ,உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கட்டுப்பணம் பெறுவதனை உடனடியாக நிறுத்துமாறு மாவட்ட அரச அதிபர்களுக்கு உத்தரவிட்டார். ஆனால் இது தொடர்பில் எழுந்த கடும் எதிர்ப்புக் காரணமாக அந்த அறிவிப்பு உடனடியாகவே வாபஸ் பெறப்பட்டது.அமைச்சின் செயலாளருக்கு இந்த அறிவிப்பை விடுக்குமாறு உத்தரவிட்டது யார்?செவ்வாய் கிரகத்தில் இருந்தா அந்த உத்தரவு வந்தது?

இவ்வாறான நிலையில் தான் தேர்தலை இடை நிறுத்துவதற்கான இறுதி முயற்சியாக தேர்தல் செலவீனத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.கொள்கை ரீதியாக இந்த சட்டம் சிறந்தது. ஆனால் பல குறைபாடுகளைக் கொண்டுள்ளது. சட்டம் சிறந்ததாக இருந்தாலும் கொண்டுவரப்பட்ட நேரம் தவறாகவுள்ளது. எனவே இந்த சட்டமூலம் தற்போது நடக்கவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு பொருந்தாது என்ற திருத்தத்தைக் கொண்டு வரத்தயாரா ?இந்த சட்டமூலத்தால் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இடைநிறுத்தப்படாது என பிரதமரால் எழுந்து உறுதிவழங்க முடியுமா?

ஒருவர் ஜனாதிபதியானது உலக சாதனைதான். அதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அவரின் கனவு நனவாகிவிட்டது. ஆனால் ஜனநாயகவாதி என்ற பெயரை அவர் இழந்து விட்டார். தேர்தலை இடை நிறுத்துவதற்கான அனைத்து சதிகளையும் அவர் இப்போது செய்கின்றார். கட்டுப்பணம் செலுத்திய நிலையில், வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் நிலையில் இந்த சட்டமூலத்தை பயன்படுத்தி உயர் நீதிமன்றத்தை நாடி தேர்தலை இடை நிறுத்த முயற்சிக்கப்படுமானால் நாம் வீதிக்கிறங்கி போராடுவோம். தேர்தலை இடைநிறுத்தும் சூழ்ச்சியை முறியடிப்போம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )