
காணாமல் ஆக்கப்பட்ட மகனை 15 வருடங்களாக தேடிய தாய் மரணம்
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா கல்மடு பூம்புகாரை சேர்ந்த இ.வள்ளியம்மா (வயது 78) என்பவரே வியாழக்கிழமை மரணமடைந்துள்ளார்.
இவரது மகன் இராமச்சந்திரன் செந்தூரன் (பிறப்பு: 1991.02.02) என்பவர் வவுனியா நகருக்கு வழமை போன்று தொழிலுக்கு (தினக்கூலி வேலைக்கு) சென்ற வேளை 2007.05.17 அன்று (கடத்தப்படும் போது வயது 16) கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
உறவுகளைத் தேடி வவுனியாவில் 2100 நாட்கள் கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிக்கண்டறியும் தமிழர் தாயக சங்கத்தின் உறுப்பினராக தீவிர பங்களிப்பு வழங்கி வந்த நிலையில் மகனை கண்டுபிடிக்க இந்த தாய் தீவிரமாக போராடியிருந்தார்.
அரச படைகள் மற்றும் அதன் துணை ஆயுதக்குழுக்களினால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 15 வருடங்களாக தேடியலைந்து, உண்மையைக் கண்டறிந்து நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வேண்டி நின்ற தாயார் ஒருவர் நோய் காரணமாக மகனை காணாமலேயே மரணமடைந்துள்ளார்.

