
யாழிற்கு மீண்டும் ‘லயன் எயார்’விமானம்
கொழும்பில் இருந்து யாழ்.பலாலி விமான நிலையத்திற்கான ‘லயன் எயார்’விமான சேவை இம்மாதம் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும். என சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரங்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுற்றுலாத்துறை,சுற்றாடல் துறை மற்றும் வனஜீவராசிகள் ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தின் போதே இதனைத்தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.இந்த குழுவில் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம், ஆலோசனைகளை முன்வைக்கலாம்.
யாழ்.பலாலி விமான நிலையத்துக்கான ‘லயன் எயார்’ விமான சேவை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்.வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை சேவைத்துறையை மேம்படுத்துவது பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் மேம்பாட்டுக்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம் என்றார்.

