
தீவிர அரசியலில் இருந்து மகிந்த விரைவில் ஓய்வு ?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணி தொடர்பில் கலந்துரையாடி வருவதாக கூறப்படுவதாக சிங்கள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கமைய 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், இந்தக் கூட்டணியுடன் எதிர்கால அரசியலை முன்னெடுப்பது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கை, அவரது அனுபவம் என்பன காரணமாக அவரது தலைமையில் கூட்டணியை உருவாக்குவது மிக சரியான முடிவாக இருக்கும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய கூட்டணி எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த தீர்மானத்திற்கு பொதுஜன பெரமுன பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

