
இலங்கை இராணுவ அதிகாரிகள் மூவர் மீது கனடா பயணத் தடை!
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கடந்தவாரம் உள்ளீர்க்கப்பட்ட தீர்மானம் உறுப்பு நாடுகளால் இராணுவ அதிகாரிகளுக்கு உடனடிப் பயணத் தடைகளை விதிப்பதை கொண்டதாகும்
இதற்கான முதல் நகர்வை மேற்கொள்ளவுள்ள கனடா, குறைந்தது மூன்று இராணுவ அதிகாரிகளைப் பெயரிடுமெனவும் இதனை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய உறுப்பு நாடுகளும் பின்பற்றும் என்றும் அறியவருவதாக ‘சண்டே ரைம்ஸ்’ நேற்று தெரிவித்துள்ளது.
ஜெனிவாவை தளமாகக் கொண்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவை வியாழனன்று “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்” என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 20 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 20 நாடுகள் வாக்களிக்கவில்லை, ஏழு நாடுகள் தீர்மானத்திற்கு எதிராகவும் இலங்கைக்கு ஆதரவாகவும் வாக்களித்தன.
முன்னைய தீர்மானங்களைப் போலல்லாமல், கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட தீர்மானதில்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் விளைவான மனித உரிமை மீறல்கள் குறித்து கணிசமான அளவுக்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இது ஊழலைக் கையாள்வதோடு, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்த போராட்டக்காரர்களை கையாண்ட விதம் குறித்தும் அரசாங்கத்தை தீர்மானம் விமர்சித்திருக்கிறது.
ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் கீழ் செயற்படும் புதிய செயலகம், மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்ததாகக் கூறப்படும் பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் புதிய தீர்மானத்தில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் விசாரணை செய்யும்
ஆசியா (கொரியாவைத் தவிர) மற்றும் ஆபிரிக்க (மாலாவியைத் தவிர) நாடுகள் வாக்களிக்கவில்லை அல்லது தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்திருந்தன.

