
மக்கள் மத்தியில் தன்னை பற்றி காணப்படும் தவறான எண்ணத்தை களையும் நடவடிக்கைகளில் கோட்டா
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மக்கள் மத்தியில் தன்னை பற்றி காணப்படும் தவறான எண்ணத்தை களைவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.
பலநாடுகள் புகலிடம் வழங்க மறுத்ததை தொடர்ந்து நாட்டிற்கு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மக்கள் மத்தியில் தன்னை பற்றிய எதிர்மறையான அபிப்பிராயங்களை களைந்து தன்னைமீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.
மக்கள் மத்தியில் தன்னை பற்றி காணப்படும் தவறான கருத்தினை களைவதற்கும் தன்னை சுற்றியிருந்தவர்கள் தவறான முடிவுகளை எடுக்குமாறு தன்னை தவறாக வழிநடத்தினார்கள் என கிராம மக்களிற்கு தெரிவிப்பதற்குமான இரகசிய பிரச்சார நடவடிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி ஆரம்பித்துள்ளார்.
ஊடகபிரமுகரும் பெரும் வர்த்தகருமான ஒருவரின் ஏற்பாட்டில் குழுவொன்று கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகயிருந்தவேளை சென்ற கிராமங்களிற்கு செல்கின்றது இவர்கள் முன்னாள் ஜனாதிபதி பற்றிய தவறான கருத்தினை களைவதற்காக மக்களுடன் உரையாடுகின்றனர்.
ராஜபக்ச தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார் அவரது குடும்பத்தினர் உட்பட அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை தவறாக வழிநடத்தியுள்ளனர் என இவர்கள் கிராம மக்கள் மத்தியில் தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் மத்தியில் கோட்டாபய ராஜபக்ச குறித்து காணப்படும் கருத்தினை அறிந்துகொள்வதற்காக கருத்துக்கணிப்பும் இடம்பெறுகின்றது.மக்கள் இன்னமும் முன்னாள் ஜனாதிபதியை நம்புகின்றனரா என அறிவதே இந்த கருத்துக்கணி;ப்பின் நோக்கம்.
வியத்மகா போன்று செயற்படும் இந்த குழுவினர் கோட்டாபய ராஜபக்ச குறித்த மக்களின் உணர்வுகளை அவதானிப்பதற்காக சமூக ஊடகங்களை அவதானிக்கின்றனர்,அவசியம் ஏற்பட்டால் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் நுழையக்கூடிய சூழ்நிலை உள்ளதா என அறிவதே இதன் நோக்கம்.

