
மாணவர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்கள் கடத்திப் படு கொலை; கரன்னாகொடவுக்குத் தண்டனை தேவை.!
“மாணவர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்களைக் கடத்திக் கப்பம் கோரிப் படு கொலை செய்தமைக்காக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட போன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.” – இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“வசந்த கரன்னாகொட, சவேந்திர சில்வா போன்ற தளபதிகளுக்கு சர்வதேசத்தால் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், சரத் பொன்சேகாவுக்குத் தடைகள் விதிக்கப்படவில்லை என்று மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளர் கூறியதை அவதானித்தேன்.
அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், அமெரிக்காவால் முதன்முதலில் எனக்குத்தான் தடைகள் விதிக்கப்பட்டன. இந்தத் தடைகள் காரணமாக, நான் இன்றளவும் அமெரிக்காவுக்குச் செல்ல முடியாது. ஆனால், ராஜபக்ஷக்களுக்குதான் தடைகள் இல்லை. அவர்கள் சுதந்திரமாக அமெரிக்காவுக்குச் சென்று வருகின்றனர்.
அத்துடன், கரன்னாகொட போன்று இழிவான செயல்களில் நான் ஈடுபட்டதில்லை. மாணவர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்களைக் கடத்திக் கப்பம் கோரிப் படு கொலை செய்தது கரன்னாகொட என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். எனவே, அத்தகைய நபர்களுக்கு பொருளாதாரத் தடைகள், பயணத் தடைகள் மட்டும் போதாது. அவர்கள் சிறைகளில் இருக்க வேண்டியவர்கள்.” – என்றார்.

