தமிழர் தாயகத்தில் மனிதப் புதைகுழி – அநுர அரசிலும் நீதிக்கு வாய்ப்பில்லை – சபா குகதாஸ்!

தமிழர் தாயகத்தில் மனிதப் புதைகுழி – அநுர அரசிலும் நீதிக்கு வாய்ப்பில்லை – சபா குகதாஸ்!

வடக்கில் பெரும்பாலும் பேசப்படும் மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் அநுர அரசிலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்பில்லை என்று வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர் தாயகத்தில் இதுவரை 17 மனிதப் புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன அவற்றுக்கான உறுதியான நீதி இதுவரை கிடைக்கவில்லை. இதனால் தான் பாதிக்கப்பட்ட உறவுகள் சர்வதேச தலையீட்டுடன் விசாரணை நடாத்தப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்தும் கோரி வருகின்றனர்.

ஆரம்பத்தில் உள்ளகப் பொறிமுறை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவோம் என கூறிய அநுர அரசாங்கம் கனடா இனப்படுகொலை தூபி திறப்பிற்கு பின்னர் போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் என்பது எல்லாம் கட்டுக்கதைகள் என கதை அளந்தனர்.

தற்போது மனிதப் புதைகுழி விவகாரத்தை வதந்தி என முடித்துள்ளனர். ஆகவே அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உள் நாட்டில் நீதி இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயமான நீதி கிடைக்க அனைவரும் ஒன்றிணைந்து சர்வதேச நாடுகளிடமும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடமும் தொடர்ச்சியான கோரிக்கைகளை வைத்து அகிம்சைப் போராட்டங்களை நடாத்த வேண்டும்.

அத்துடன் உள் நாட்டில் நீதிக்கான கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன என்ற செய்தியை வெளி நாட்டு ராஜதந்திரிகளுக்கு கூற வேண்டும் – என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )