
தமிழருக்கு ஆதரவான நிகழ்வுக்கு எதிர்ப்பு; நீர்கொழும்பில் இனவாதக் குழு குழப்பியது
”தமிழர்களுக்கு எதிரான இன ஒழிப்பிற்கு வருடங்கள் 16″ , “சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளும் அரசியல் யாப்பை முன்வைத்திடு”ஆகிய தொனிப்பொருட்களில் கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் நீர்கொழும்பில் ஏற்பாடு செய்த நிகழ்வேந்தல் மற்றும் கருத்தரங்கிற்கு எதிராக இனவாத கும்பலொன்று ஆர்பாட்டம் செய்து குழப்பியடித்தது.
கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் ஏற்பாடு செய்த சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளும் அரசியல் யாப்பை முன்வைத்திடு எனும் கருத்தரங்கு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க நீர்கொழும்பு அலுவலக மண்டபத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. கருத்தரங்கு முடிவில் நீர்கொழும்பு தெல்வத்தசந்தியில் “தமிழர்களுக்கு எதிரான இன ஒழிப்பிற்கு வருடங்கள் 16” எனும் தொனிப் பொருளில் நினைவேந்தல் நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
கருத்தரங்கு நடந்துகொண்டு இருக்கும்போது அவ்விடத்திற்கு வந்த தேசிய கொடியை கையில் ஏந்திய இனவாத சிறிய கும்பல் ஒன்று மண்டபத்திற்கு முன்பாக நின்று இனவாத கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
இச் சந்தர்பத்தில் அங்கு வந்த பொலிஸார் மாலை இடம்பெறவிருந்த வீதி நிகழ்வேந்தலை நிறுத்துவதற்காக நீதிமன்றத்தில் பெற்றுக்கொண்ட தடை உத்தரவை வணபிதா மாரிமுத்து சத்திவேலிடம் கையளித்தனர்.
பின்னர் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்னிலையில் வந்து அவர்கள் சுயநிர்ணய உரிமை தொடர்பாக பிரேரணை முன்வைக்கவே கருத்தரங்கு நடத்துகின்றனர். வீதியில் ஏதும் இடம்பெறாது என தெரிவித்தனர்.
அப்படி என்றால் நாம் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்வோம் எனக்கூறி ஆர்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.