
மோடியை இங்கு அழைப்பதில் ரணில் தோற்றார் அநுர வென்றார்
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டுக்கு அழைத்துவரும் முயற்சி தோல்வியடைந்தாலும் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு அழைத்து வர ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்கு முன்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருவதற்கான ஏற்பாடுகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவரின் வருகையின் பின்னர் சம்பூர் மின் உற்பத்தி திட்டம் ஆரம்பிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு தனது முதல் பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு வருமாறு அனுரகுமார திசாநாயக்க அதிகாரப்பூர்வமாக அழைத்தார். அந்த வேண்டுகோளுக்கு இணங்க, தற்போது எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பயணத்தின் போது, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இலங்கையில் கட்டப்படவுள்ள 120 மெகாவோட் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்திற்கு மோடி அடிக்கல் நாட்டுவார் என்று பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜே.வி.பி சம்பூர் மின் உற்பத்தி நிலையத்திற்கும் இந்திய தலையீட்டிற்கும் எதிராக ஒரு பெரிய போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. தற்போது ஜே.வி.பி அரசாங்கத்தின் கீழ் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்த்தின் கட்டுமானத்தை ஆரம்பிக்க இந்திய பிரதமர் இலங்கை வரவுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, ஏப்ரல் மாதம் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம் பெரும்பாலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.