
கிளீன் ஸ்ரீலங்கா 13க்கு உதவுமா?
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் மூலம் அரசியலமைப்பின் 13 ஆ வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பி.யான ப.சத்தியலிங்கம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் 2 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இதனை வலியுறுத்திய அவர் மேலும் உரையாற்றுகையில்,
அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவோம் என்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டே நாம் அனைவரும் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளோம். அந்த அரசியலமைப்பில் காணப்படும் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகின்றோம்.
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் வெற்றியளிக்க வேண்டும் நாட்டில் மாறி மாறி வந்த அரசாங்கங்கத்தினர் ஜனநாயகத்தை மதிக்காமல் செய்யப்பட்டுள்ளார்கள் என்பதால் இம்முறை அதிகூடிய பெரும்பான்மையால் இந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் உட்பட அரசாங்கத்தின் ஏனைய வேலைத் திட்டங்கள் தோல்வியடையுமானால்இந்த நாட்டு மக்கள் ஜனநாயகத்தின் மீது உள்ள நம்பிக்கையை இழந்து இந்த நாடு வேறு ஒரு நாடாக மாறும் சூழ்நிலை உருவாகும்.அதற்கான வழியை தற்போதைய அரசாங்கத்தினரும் ஏற்படுத்தி விடக்கூடாது என்றார்.

