
கொலைக் குற்றச்சாட்டில் வியாழேந்திரனின் சாரதி சி.ஜ.டி.யால் கைது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மட்டக்களப்பு வீட்டின் முன்பாக 2021 ஆம் ஆண்டில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.ஜ.டி.யினரால் கொலை குற்றத்தின் பேரில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அமைச்சரின் வாகன சாரதி ஒருவரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
2021 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்தின் வீட்டிற்கு முன்பாக அமைச்சரின் மெய்பாதுகாப்பு உத்தியோகத்தர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 28 வயதுடைய பாலேந்திரன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதையடுத்து மெய்பாதுகாப்பு உத்தியோகத்தரை கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்டவர் சார்பில் ஆஜராகிய பிரபல சட்டத்தரணிகளான ந.கமலதாஸ், வி.சுதர்ஷன் ஆகியோர் இந்தக் கொலை தொடர்பாக பொலிஸார் உரிய விசாரணை நடத்த வில்லை என தொடர்ந்து ஆட்சோபித்து வந்ததுடன் உயிரிழந்தவரின் பெற்றோரும் வழக்கை குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு மாற்றுமாறு சட்டத்தரணி ஊடாக கோரிக்கை விடுத்தனர்
இந்த நிலையில் குறித்த விசாரணையை கொழும்பு குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வந்த நிலையில் அமைச்சரின் வாகன சாரதியான தம்பான் என்றழைக்கப்படும் தனுசன் என்பவரை சந்தேகத்தின் பேரில் கொலைக் குற்றத்தின் அடிப்படையில் வெளிநாடு செல்ல இருந்து நிலையில் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை சிஐ டி யினர் முன்நகர்வு பத்திரம் தாக்கல் செய்து ஆஜர்படுத்தியதையடுத்து வழக்கு விசாரணையை எடுத்துக் கொண்ட நீதவான் அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அமைச்சரின் மெய்பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒரு வருடத்தின் பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன் 3 வருடத்திற்கு பின்னர் சந்தேகத்தில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

