தமிழரசுக் கட்சியின் யாப்பை மீறி செயற்பட முடியாது – யாழ் நீதிமன்றில் வழக்கு

தமிழரசுக் கட்சியின் யாப்பை மீறி செயற்பட முடியாது – யாழ் நீதிமன்றில் வழக்கு

தமிழரசுக்கட்சியின் யாப்பை மீறி செயற்பட முடியாது என்பதனால் செயலாளர் மத்திய குழுவில் இருந்து யாரையும் நீக்க அதிகாரம் இல்லை.

இதற்கான நீதியை பெறவே யாழ் நீதிமன்றத்தில் (18.12.2024) வழக்கொன்றை தாக்கல் செய்தேன் என முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான வைத்தியர் சி. சிவமோகன் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சிக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சியின் யாப்பின் அடிப்படையில் மத்திய குழு உறுப்பினர்கள் எவரையும் நிறுத்துவதற்கு அதிகாரம் இல்லை.

மூலக்கிளை, பிரதேச கிளையில் எவரேனும் தவறு செய்திருந்தால் மாத்திரமே அது தொடர்பான முறைப்பாடு கிடைத்தால் நிறுத்துவதற்கான அதிகாரம் இருக்கின்றது.

அதை விடுத்து மத்திய குழுவில் இருக்கும் யாரையும் நிறுத்துவதற்கு செயலாளருக்கு அதிகாரம் இல்லை.

அது தவிர தமிழரசு கட்சி கூட்டம் கூடுவதாக இருந்தால் தலைவரின் கலந்துரையாடலோடு நிகழ்ச்சி நிரலை தலைவரிடம் அனுப்பி அதை தலைவர் ஏற்றுக்கொண்டு கூட்டம் கூடுவதற்கு அனுமதியை பெறவேண்டும் என்பதுடன் அந்த நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் கூட்டத்தை நடத்தலாம் என தலைவர் கூறியதன் பின்னரே கூட்டம் கூடலாம்.

அத்துடன் தலைவரின் அனுமதிக்கு பின்னரே ஏனையவருக்கும் அந்த நிகழ்ச்சி நிரலையும் கூட்டத்துக்கான அழைப்பையும் அனுப்பலாம். இவ்வாறு தான் யாப்பு கூறுகின்றது.

தலைவர் கட்சியை வழிநடத்துபவர், செயலாளர் என்பவர் கூறுவதைச் செய்பவராக தான் இருப்பார். இவ்வாறு தெளிவாக யாப்பில் கூறப்பட்டுள்ளது.

எனவே யாப்பை மீறி அனைத்தையும் செயல்படுத்த விட முடியாது. அதனை மையப்படுத்தியே நேற்றைய தினம் யாழ் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்திருந்தேன்.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணை சில நாட்களில் இடம்பறும் என தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )