சவால்களைக் கண்டு தப்பியோடக்கூடாது

சவால்களைக் கண்டு தப்பியோடக்கூடாது

இளம் சந்ததியினர் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொண்டு கொள்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் சவால்களை கண்டு ஒருபோதும் தப்பியோட கூடாது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கிழக்கு மாகாண இளைஞர் ,யுவதிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
மட்டக்களப்பு சுற்றுலா விடுதி ஒன்றில் சனிக்கிழமை நடைபெற்ற இளையோர் அணி சந்திப்பிலேயே இந்த அறிவுரையைவழங்கிய ஜனாதிபதி இளைஞர், யுவதிகள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதில்களை வழங்கினார்.

கேள்வி – நெருக்கடியிலிருந்த நாட்டை மீட்கும் சவாலை எவ்வாறு ஏற்றுக்கொண்டீர்கள், உங்கள் எதிர்கால திட்டம் எவ்வாறானது? நீங்கள் கற்ற கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்க நான் ஆசைப்பட்டடேன். அது கனவாகவே போய்விட்டது. எதிர்கால சந்ததிக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா அல்லது அதற்கு நிகராக ஏனைய பாடசாலைகள் மேம்படுத்தப்படுமா?

பதில்- அனைவரும் தப்பியோடிய நிலையில் நான் நாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்டேன். சுய நம்பிக்கை இருந்தால் எவரும் சவால்களுக்கு அஞ்ச வேண்டியிருக்காது. ஓடுவதற்காக பயன்படுத்தும் சப்பாத்துக்களை, சவால்களை கண்டு அஞ்சி ஓடுவதற்காக பயன்படுத்தக்கூடாது. நாட்டை மீட்க முடியும் என்ற நம்பிக்கையில் ஏற்றுக்கொண்டேன். நான் பொறுப்பேற்றிருக்காவிட்டால் நாட்டின் நிலை என்னவாகியிருக்கும்? இங்கு இவ்வாறு அமர்ந்து பேசக்கூட சந்தர்ப்பம் இருந்திருக்காது. சவால்களை கண்டு அஞ்சக்கூடாது. ஒருபோதும் ஓடி ஒளியவும் கூடாது. ரோயல் கல்லூரியை போலவே பல பாடசாலைகளின் வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன. அரசாங்கத்தினால் சிறந்த கல்வியை வழங்க முடியும். ஆனால் முதுகெலும்பை தர முடியாது. அது தம்மிடம் இருக்க வேண்டும்.

கேள்வி : நாட்டில் வளங்களிருந்தும், பல பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம். நமது தொழிற்சாலைகளை மேம்படுத்த உங்களிடம் எவ்வாறான யோசனைகள் உள்ளன?

பதில் – உங்களுக்கு பிடித்த பாடகர் யுவன் சங்கர் ராஜா என்று கூறினீர்கள் . அப்படியானால் பாடல்களையும் நாம் இறக்குமதி தானே செய்கிறோம். திறந்த உலகில் எமது சந்தைகளை வலுவூட்ட வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. நமது நாட்டின் உற்பத்திளை ஏற்றுமதி செய்வது குறித்து இதுவரை கவனம் செலுத்தவில்லை. நாம் ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டும். ஏற்றுமதிசார் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். நெருக்கடி காலத்தில் எம்மிடம் போதிய வெளிநாட்டு கையிருப்பும் இருக்கவில்லை. எரிபொருள் உள்ளிட்டவைகளை இறக்குமதி செய்யவும் வெளிநாட்டு வருவாய் தேவைப்படும். அவ்வாறான தேவைகளுக்காக பெற்றுக்கொண்ட கடனை எம்மால் மீள செலுத்த முடியாமல் போனது.அதனால் எம்மிடத்திலிருக்கும் வளங்களைப் பயன்படுத்தி அதனூடாக ஏற்றுமதியை பலப்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும்.

கேள்வி – நீங்கள் சிறந்த தலைவர். தலைசிறந்த அரசியல்வாதி. அதன்படி இளையோரின் எதிர்காலம் சிறப்பதற்கு எவ்வாறான அறிவுரையை சொல்வீர்கள்?
பதில் – நன்றாக கற்க வேண்டும். அறிவார்ந்த சிந்தனை தேவை. கொள்கைகளுக்கு மதிப்பளியுங்கள். சவால்களை கண்டு ஒருபோதும் தப்பியோடாதிருங்கள் என்றார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர்களான எஸ்.வியாழேந்திரன், சிவனேசத்துரை சந்திரகாந்தன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் எச்.ஈ.இம்.டபிள்யூ. ஜீ.திசாநாயக்க, மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )