வீரமுனையில் வீதி வரவேற்பு கோபுரம் அமைக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை; இரு தரப்புக்கு இடையில் முறுகல்

வீரமுனையில் வீதி வரவேற்பு கோபுரம் அமைக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை; இரு தரப்புக்கு இடையில் முறுகல்

அம்பாறை வீரமுனை கிராம வீதி வரவேற்பு கோபுரம் அமைக்க நேற்றுமுன்தினம் சனிக்கிழமை(15) முற்பகல்நடந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இந்தப் பணியை அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்க வந்த இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு சம்மாந்துறை நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு வழங்கியுள்ளது.

இந்த நீதிமன்ற உத்தரவை சம்மாந்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று வாசித்து காட்டியதுடன் அப்பகுதியில் இடம்பெறவிருந்த பதற்ற நிலைமையினை சீர் செய்தனர்.

மேலும் கடந்த வெள்ளிக்கிழமை(14) சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில், வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைப்பதற்கு எதிராக இருவரினால் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டதற்கு அமைய நீதிமன்றத்திடமிருந்து இடைக்காலத் தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நௌபர் மன்றிக்கு சமர்ப்பித்த அறிக்கையின் பிரகாரம், சனிக்கிழமை சம்மாந்துறை பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்டதும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்டதுமான ஆண்டியடிச் சந்தி எனும் இடத்தில் வீரமுனைக்கு செல்லும் வீதியில் வீரமுனை பிரதேசவாசிகளால் வரவேற்பு கோபுரம் ஒன்று அமைப்பதற்க்கு அடிக்கல் நாட்டு விழாவினை நடாத்துவதனால் தமிழ் -முஸ்லிம் மக்களுக்கிடையில் கலவரம் ஏற்படுவதற்கு சாத்தியமுள்ளதாலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் மற்றும் சமாதான சீர்குலைவு ஏற்படக்கூடிய சாத்தியமுள்ளதாலும் பொதுமக்களின் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்பட கூடிய சாத்தியமுள்ளதாலும் இந்த நிகழ்வை நடாத்துவது உசிதமானது அல்ல என்பதனால் இந்த நிகழ்வினை நடத்தாமல் நிறுத்துமாறு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,வீரமுனை கோவில் தலைவர் ராஐகோபால், கிராம உத்தியோகத்தர் பிரதீபன் உட்பட சிலருக்கு, கோபுரம் அமைப்பதற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு தாக்கல் செய்த மனுவுக்கு அமைவாக நீதிமன்றால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எனினும் சனிக்கிழமை, அந்த இடத்திற்கு இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வருகை தந்திருந்தார். சம்மாந்துறை பொலிஸாரினால் நீதிமன்ற தடையுத்தரவு வாசிக்கப்பட்டது. இதன் போது இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் அமைதியாக அவ்விடத்தை விட்டுச் சென்றார். இதே வேளை வீரமுனை பிரதேச மக்கள் மேற்படி நீதிமன்ற உத்தரவை மீறி கம்பி கூடுகள் நாட்டியதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் முஸ்லிம் தமிழ் இனத்தவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அந்த இடத்திற்கு பொலிஸ் உயர் அதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்க பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.சி.எம். சகீல் பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லாவின் ன் சம்மாந்துறைக்கான இணைப்புச் செயலாளர் ஆக்கிப் அன்சார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ. பிரசாந்தன் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினர்,கோவில் நிர்வாகத்தினர்,கிராம சேவை உத்தியோகத்தர், நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர் பொதுமக்கள் என பலரும் அங்கு வந்திருந்தனர்.

இந்த விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்தவர்களும் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்களும் 2024.06.19ம் திகதி காலை 9 மணிக்கு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இந்தக் கோபுரம் அமைப்பது சம்பந்தமாக இதற்கு முன்னரும் முயற்சி செய்து அது தொடர்பில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு சட்டப்படி அனுமதி பெறப்படாமல் இதற்கான தீர்வு இன்னும் கிடைக்காமல் உள்ள நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )