ரணிலின் வருகையை எதிர்த்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்; தமிழருக்கு ஒரு சட்டம் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமா?

ரணிலின் வருகையை எதிர்த்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்; தமிழருக்கு ஒரு சட்டம் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமா?

கிளிநொச்சிக்கு ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்ய இருந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்றை நிகழ்த்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் திட்டமிட்டிருந்ததனர்.

ஆனால் அந்த போராட்டத்திற்கு நீதிமன்ற தடை உத்தரவு விதிக்கப்பட்டதாக கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இன்று சனிக்கிழமை ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து விளக்கமளித்தனர்.

கிளிநொச்சி மாவட்ட வலிந்து ஆக்கப்பட்ட உறவுகள் சார்பில் கதிர்காமநாதன் கோகிலவாணி இது குறித்து தெரிவிக்கையில்,

ரணிலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நிகழ்த்த திட்டமிட்டிருந்தோம், அந்த போராட்டத்திற்கு நீதிமன்ற தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

தமது பிள்ளைகளை யுத்த காலத்தில் இராணுவத்தின் கையால் ஒப்படைத்தும் , விசாரணைக்கு என்று அழைத்து காணாமல் ஆக்கப்பட்டு இன்று வரையில் எமக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை.

கடந்த யுத்த காலங்களில் உண்ண உணவின்றி உப்பு கஞ்சி குடித்து உயிரை காத்து கொண்டோம். அதனை சர்வதேசத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எடுத்து காட்டும் முகமாக மே18 முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வந்தது.

குறித்த நினைவு கஞ்சிகளை இராணுவம் மற்றும் பொலிஸார் கஞ்சியை காலால்தட்டி சுகாதார கேடு என பலரை கைது செய்துள்ளனர்.

ஆனால் இன்று நாடுபூராகவும் வெசாக் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.

இதுவரையில் எந்த குழப்பங்களும் இல்லாமல் நடாத்துகின்றனர்.

அப்படி என்றால் தமிழருக்கு ஒரு சட்டம் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமா என கேள்விகள் எழுந்துள்ளதாகவும், இதன் காரணங்களுக்காகவே ஐனாதிபதியின் வருகையை இன்று எதிர்த்து சர்வதேச நாடுகளுக்கு உணர்த்தும் வகையில் ஊடகங்கள் வாயிலாக கூறுவதாகவும் கதிர்காமநாதன் கோகிலவாணி தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )