இலங்கை கூலிப் படையினர் தங்களை மீட்குமாறு கோரிக்கை; ஐ.நா.விடம் பெருமளவு கடிதங்கள்

இலங்கை கூலிப் படையினர் தங்களை மீட்குமாறு கோரிக்கை; ஐ.நா.விடம் பெருமளவு கடிதங்கள்

ரஷ்ய படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படும் இலங்கையர்களின் குடும்பங்களிலிருந்து பெறப்பட்ட ஏராளமான கடிதங்களை ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பியுள்ளது.

அத்துடன், அந்த குடும்பங்களில் உறுப்பினர்கள் வாக்குமூலம் வழங்குவதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் – ரஷ்ய போர் களத்தில் இலங்கை இராணுவத்தின் முன்னாள் வீரர்கள் கூலிப்படைகளாகச் செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், போரில் பல இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. சுமார் 40 இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் தெரிவித்திருந்தார்.

போலியான வாக்குறுதிகள் மூலம் ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விரைவில் தம்மை மீட்டெடுக்குமாறு போர் களத்தில் உள்ள இலங்கையர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பில் கடந்த மாதம், குற்றப் புலனாய்வுப் பிரிவின் மனித கடத்தல் குற்றப்பிரிவு இது தொடர்பாக ஓய்வுபெற்ற மேஜர் மற்றும் வேலைவாய்ப்பு முகவர் ஒருவரை கைது செய்தது.

எவ்வாறாயினும், இந்த மோசடியின் பின்னணியில் பெண்கள் உள்ளிட்ட பலர் இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மோசடிக்கு பலியாகிய இலங்கையர்களில் பெரும்பான்மையானவர்கள் முன்னாள் இராணுவத்தினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )