வடக்கில் இன்று முதல் வெப்ப அலை வீசும்!; 41 பாகைக்கு வெப்பநிலை செல்லலாம்

வடக்கில் இன்று முதல் வெப்ப அலை வீசும்!; 41 பாகைக்கு வெப்பநிலை செல்லலாம்

வடக்கு மாகாணத்தில் குறிப்பாக வன்னிப் பகுதியில் இன்று 3 ஆம் திகதி முதல் வெப்பநிலை 41 பாகை செல்சியஸை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் பல இடங்களில் வெப்ப அலை (Heat Waves) வீசுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தின் வவுனியா,மாங்குளம், முறிகண்டி, நட்டாங்கண்டல், துணுக்காய், ஓமந்தை, கரிப்பட்ட முறிப்பு, சின்னத்தம்பனை, பாலைப் பாணி, மூன்றுமுறிப்பு, ஐயன் குளம், மடு,கீரி சுட்டான், தட்டாங்குளம், பகுதிகளில் இன்று முதல் காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை பகல் பொழுது வெப்பநிலை 41 பாகை செல்சியஸை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக வடக்கு மாகாணத்தின் உள்நிலப்பகுதிகளின் பல இடங்களில் வெப்ப அலை (Heat Waves) வீசுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

வெப்பச் சலனம் காரணமாக ஆங்காங்கே ஒரு சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னரும் காலை 7 மணிக்கு முன்னரும் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனாலும் இம்மழை அதிகரிக்கும் வெப்பநிலையின் பாதிப்புக்களை தற்காலிகமாக தணித்து குறுகிய காலத்திற்கு மட்டுமே சௌகரியமான வானிலையை( Comfort Weather ) உருவாக்கும்.

முன்னைய பதிவொன்றில் குறிப்பிட்டது போன்று, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும்.

எனவே அதிகரிக்கும் வெப்பநிலை, வெப்ப அலை தொடர்பிலும் எச்சரிக்கையாக இருப்பது சிறந்தது.

அதிகரித்த வெப்பநிலையை கருத்தில் கொண்டு எமது அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்வது உசிதமானது எனவும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )