
செங்கடல் செல்லும் கடற்படைக் கப்பல் பல இலட்சம் முஸ்லிம் வாக்குகளை இழக்கும் ரணில்
செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போரிட ஒரு கடற்படைக் கப்பலை அனுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானத்தின் காரணமாக இதுவரை அவரின் கைகளில் இருந்த பல இலட்சம் முஸ்லிம் வாக்குகளை இழக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்படும் பிரச்சினைகளை சுமூகமாக அணுகுவதற்காக சுவிற்சர்லாந்துக்கு செல்வதற்கு முன்னர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் அவரது நட்புறவான முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் முஸ்லிம் வழக்கறிஞர்கள் குழுவுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக மத்திய கிழக்கு நாடுகளின் அனைத்து தூதுவர்களையும் அழைத்து முஸ்லிம் நாடுகளில் இருந்து அரசாங்கத்திற்கு ஏற்படக்கூடிய எதிர்ப்பை தணிக்கும் வகையில் விசேட கலந்துரையாடலொன்றை நடத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்த போதிலும் இந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சற்றும் எதிர்பார்க்காத வகையில் இந்த பிரேரணைக்கு மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், மோதல்களின் பின்னர் காசா பகுதிக்கு பாடசாலை ஒன்றை வழங்க தயார் என ஜனாதிபதி தெரிவித்திருந்த போதிலும், தூதுவர்களிடமிருந்து ஜனாதிபதி எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை.
இதன்படி நிலைமை பாரதூரமானது என்பதை உணர்ந்து முஸ்லிம் சமூகம் எவ்வாறு சமநிலையில் இருக்க வேண்டும் என்பது தொடர்பில் முஸ்லிம் ஆதரவு அமைச்சர்களுடன் மேலும் பல சுற்றுக் கலந்துரையாடல்களை நடத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

