
நீதிபதியை மாற்றித்தான் பிள்ளையானை விடுவித்தனர்; முன்னாள் ஜனாதிபதியே சதி செய்தார்
யுத்தகால மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையே சரியானது என்று நாங்கள் கூறும் போது அது அரசியலமைப்புக்கு முரணானது யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச விசாரணை அவசியமில்லை என்று கூறியவர்கள் இப்போது சர்வதேச விசாரணை தொடர்பில் பேசுகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. யான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முதல்நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த
அவர் மேலும் பேசுகையில்,
இதற்கு முன்னர் இங்கு பேசியவர்கள் நடக்கும் சம்பவங்களை கர்மா என்றுதான் கூறினர். முன்னாள் ஜனாதிபதியே சதித்திட்டம் செய்துள்ளார். இறுதியில் அவர் இந்தப் பதவியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளார். இதன்படி கர்மா நடந்துள்ளது என்றே கூற வேண்டும்.
யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச விசாரணை அவசியமில்லை என்று கூறியவர்கள் இப்போது சர்வதேச விசாரணை தொடர்பில் பேசுகின்றனர். யுத்தகால மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையே சரியானது என்று நாங்கள் கூறும் போது அது அரசியலமைப்புக்கு முரணானது என்று அப்போது கூறினர் சிவில் யுத்தம் நடைபெற்ற அனைத்து நாடுகளிலும் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை 2015 ஆம் ஆண்டில் கலப்பு நீதிமன்றம் அவசியம் என்று கூறிய அரசாங்கம் பின்னர் அந்த நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியது.யுத்தத்தில் இரண்டு தரப்புகள் சம்பந்தப்பட்டிருந்தால் சர்வதேச விசாரணைகள் அவசியம்.
இந்நிலையில் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு பரிந்துரைகளை முன்வைத்திருந்தது. ஜனாதிபதித் தேர்தலின் போது ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்யவா இது நடக்கின்றது என்று நாங்கள் கேள்வியெழுப்பியிருந்தோம். இப்போது இது உண்மை என்று அறியக் கூடியதாக உள்ளது. சனல் 4 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது. அப்போது 2 ஆவணங்களை வெளியிட்ட போது அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் இப்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆவணங்களை ஏற்றுக்கொள்கின்றனர். சனல் 4 அப்போது வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பில் நாங்கள் அறிந்துள்ளோம்.
இதேவேளை நான் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு பிணை வழங்கப்படும் போது அதற்கு எதிராக ஆஜராகியிருந்தேன். இந்நிலையில் அசாத் மௌலானா சனல் 4 ஊடகத்தில் கூறும் போது எப்படி பிள்ளையான் விடுதலையானார் என்பதனை குறிப்பிட்டுள்ளதுடன் நீதிபதிகளின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். இங்கு திட்டமிட்டே அனைத்தும் நடந்துள்ளன. இந்த விடயத்தில் நீதிபதியை மாற்றியுள்ளனர்.
இந்நிலையில் பிள்ளையானுக்கு எதிரான வழக்கை தொடர ஆதாரங்கள் இல்லையென்று சட்டமா அதிபர் திணைக்களம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எவ்வாறு சிறப்பு நீதிபதி நியமிக்கப்பட்டார் என்பதனை அசாத் மௌலான கூறியுள்ளார். நான் பிணை வழங்கப்படும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனாலும் அவர் விடுவிக்கப்பட்டார். சனல் 4 எவ்வாறு அவர் வெளியில் வந்தார் என்பதனை காட்டியுள்ளது. இதற்கான பதிவுகள் உள்ளன என்றார்.
இதன்போது ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறுகையில்,
என்னுடைய பெயரை தொடர்ந்து கூறுவதுடன் , நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் பேசுகின்றார். அவர் சட்டத்தரணி என்ற வகையில் இவ்வாறு பேசுவது பொருத்தமானது அல்ல. இவ்வாறான விடயங்களை அவர் என்னை தாக்க வேண்டும் என்றே பேசுகின்றார். அவரும் நானும் மக்கள் பிரதிநிதிகளே. இந்த கௌவரத்தை வழங்க அவர் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

