
தமிழர்கள் மீது இப்போது மதரீதியாகவும் பிரச்சினை; மாவை விசனம்
தமிழர்கள் மீது இனரீதியான முரண்பாடுகளை ஏற்படுத்தி வந்த பேரினவாத அரசு தற்போது மதரீதியான பிரச்சினைகளையும் உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தமிழ்க் கட்சிகள் அனைவரும்
ஒன்றுப்பட்டு எமது மக்கள் அடைய வேண்டிய விடுலையை பற்றி பேசவேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் பொதுக்கூட்டமும், புதிய நிருவாகத் தெரிவும் நேற்று புதன்கிழமை அறிவகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு அவர் தலைமை தாங்கி பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்து மேலும் பேசகையில்:
தமிழர்கள் மீதான மத ரீதியாக கிளர்ச்சிகள் தென்னிலங்கையிலும்,
பாராளுமன்றத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.தமிழர்கள் மீது இனரீதியான முரண்பாடுகளை ஏற்படுத்தி வந்த பேரினவாத அரசு தற்போது மதரீதியான பிரச்சினைகளையும் உருவாக்கியுள்ளது. இவ்வாறான நிலையில்,நாட்டில் எப்பொழுதும் இல்லா அளவுக்கு இன, மதவாத கருத்துக்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.இதனை பல தீவிரவாத தரப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் மூலமே கிளர்ச்சிகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
இதுவரை காலமும் இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்ள நிலையில் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் தமிழ்க் கட்சிகள் அனைவரும் ஒன்றுப்பட்டு எமது மக்கள் அடைய வேண்டிய விடுலையை பற்றி பேசவேண்டும்.
இதற்காக நாம் சர்வதேச அமைப்புக்கள், உள்ளிட்ட பலருடன் இணைந்து ஒற்றுமையாக ஒன்றுப்பட்டு உழைப்பது அவசியம். இதனை இந்த இடத்தில் நான் வலியுறுத்துகின்றேன்.
இப்பொதுக் கூட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் செல்வி அன்பழகி செல்வரட்ணம் , துணைத் தலைவர் வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, துணைச் செயலாளர் கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோர் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர்.

