
எமது ‘பதில்கள் ‘ இனவாதமா?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே இனவாதத்தை தூண்டுகின்றனர்.அது தொடர்பில் அவர்களுக்கு நாம் பதிலளிக்கும் போதே எங்களை இனவாதிகள் என்று கூறுகின்றனர் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
வழக்கு விசாரணையொன்று தொடர்பாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்று புதன்கிழமை சென்றிருந்த போது, நீதிமன்றத்திற்கு வெளியே இருந்த ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே வீரவன்ச இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போது மீண்டும் இனவாதம் தூண்டப்படுகின்றது என்றும், அதற்கு பின்னால் நீங்கள் இருப்பதாக கூறப்படுவதாகவும் வீரவன்சவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த விமல் வீரவன்ச எம்.பி.கூறுகையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே இனவாதத்தை தூண்டுகின்றனரே தவிர நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. நாங்கள் எதனை தூண்டியுள்ளோம்?. நாங்கள் தமிழ் அல்லது முஸ்லிம் மக்களுக்கு எதிராக எதையாவது கூறியுள்ளோமா? அவர்கள் தூண்டுகின்றனர். அதற்கு பதிலளிக்கும் போது எங்களை இனவாதிகள் என்கின்றனர் என்றார்.

