
டொலரின் பெறுமதி உயர்வால் கவலை கொள்ளத் தேவையில்லை
ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளமை கவலை கொள்ள வேண்டிய விடயமல்ல என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களில் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் மூலம் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி மூன்று பில்லியன் டொலர்களை கொள்வனவு செய்துள்ளதாகவும் அதனால்தான் டொலர் இந்த மட்டத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டொலரின் விலை வழங்கல் மற்றும் தேவையால் தீர்மானிக்கப்படுகிறது, எனவே இந்த நிலைமை குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை என்றார்
மத்திய வங்கியின் மாற்று விகித அட்டவணையில் நேற்று முன்தினம் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 311.60 ரூபாவாகவும் விற்பனை விலை 328.92 ரூபாவாகவும் இருந்தது.
இதேவேளை நேற்றைய தினம் நாட்டிலுள்ள அனைத்து முக்கிய வங்கிகளிலும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
பல அரச மற்றும் தனியார் வங்கிகளில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை சுமார் 330 ரூபாவாகவும், கொள்வனவு விலை 315 ரூபாவாகவும் காணப்பட்டது.
மத்திய வங்கியின் மாற்று விகித அட்டவணையில் நேற்று டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 311.60 ரூபாவாகவும் விற்பனை விலை 328.92 ரூபாவாகவும் காணப்பட்டது.
கடந்த வாரம், சுமார் 300 இறக்குமதி பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நிதி அமைச்சகம் தளர்த்தியது.எதிர்காலத்தில் படிப்படியாக இந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் நிதி அமைச்சகம் முன்பு குறிப்பிட்டிருந்தது.

