
முல்லைத்தீவு மாவட்டத்தில் தீவிர பௌத்த மயமாக்கலில் ஈடுபட்டவரே அனுர மனதுங்க
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் பெயரால் மிகமோசமான பௌத்த மயமாக்கல் நடவடிக்கையில் மிக தீவிரமாக செயற்பட்டுவந்தவரே பதவி விலகிய தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க என வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
குருந்தூர் மாலையை ஆக்கிரமித்த தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அதற்கும் மேலதிகமாக அதனை சூழவுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 300 ஏக்கர் வளமான காணியை அபகரிக்க கடுமையான முயற்சிகளை எடுத்திருந்தார். கடந்த 2ஆம் மாதமும் காணியை அளவீடு செய்ய முயற்சித்தபோது பொதுமக்களுடன் இணைந்து நாங்கள் அதனை தடுத்திருந்தோம்.
நாங்கள் சென்று எங்களுடைய காணிகளை ஏன் அபகரிக்கிறீர்கள் என கேட்கும்போது நான் என்ன செய்வது என எங்களிடம் கேட்ட தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மறுபக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகப்பெரும் நில அபகரிப்புக்கும் பௌத்த மயமாக்கலுக்கும் மூல காணமாக திகழ்ந்தவர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் மட்டுமல்லாமல் மாவட்டத்திற்குள்ளேயும் பல இடங்களில் தொல்பொருள் திணைக்களத்தின் பெயரால் ஆக்கிரமிப்பு முயற்சிகளை முன்னெடுத்தவர் என்றார்.

