
தேர்தல்கள் ஆணைக்குழுவில் சந்தேகம்!
தேர்தலை நடத்தாது ஜனாதிபதியின் தாளத்திற்கு ஏற்றால் போன்று தேர்தல்கள் ஆணைக்குழு செயற்படுகின்றதா? என்ற சந்தேகங்கள் எழுவதாக ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களினால் கொழும்பிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது அவர் கூறுகையில்,
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இந்த இடத்திற்கு வந்துள்ளனர். தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகின்றன. இதனால் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி வேட்பாளர்கள் இங்கே வந்துள்ளனர். தேர்தல் தொடர்பில் அரசாங்கத்திற்கு பொறுப்புகள் உள்ளன. இதன்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதேபோன்று தேர்தல்கள் ஆணைக்குழுவும் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஜனாதிபதி நிதியை கொடுக்காது இருப்பதுடன், அதனை ஏற்றுக்கொண்டு ஆணைக்குழுவும் தேர்தலை நடத்தாது இருக்கின்றது. ஆணைக்குழு நிதியை கேட்டு சட்டப்படி நடவடிக்கையைக்கூட எடுக்காது இருக்கின்றது.
தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும். எவ்வாறாயினும் அதற்கான நடவடிக்கை எடுக்காது இருப்பதால் ஜனாதிபதியின் தாளத்திற்கு ஏற்றால் போன்று தேர்தல்கள் ஆணைக்குழு செயற்படுகின்றதா? என்ற சந்தேகங்கள் இருக்கின்றன.
தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை ஒத்திவைப்பதற்காக அன்றி தேர்தலை நடத்துவதற்காவே இருக்கின்றது. இதனால் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் தேர்தல் அவசியமில்லை என்று நினைப்பதாக ஜனாதிபதி கூறுவதுடன், 50 வீதம் கூட வாக்களிக்கமாட்டார்கள் என்று கூறுகின்றார். அவ்வாறு இல்லை 90 வீதமானவர்களாவது வாக்களிப்பர். எந்தத் தேர்தல் நடந்தாலும் இந்த ஆட்சியாளர்களை தோற்கடிப்பர். எவ்வாறாயினும் ஜனநாயகத்துடனான விளையாட்டுகளை நிறுத்துங்கள். இல்லையேல் தேர்தலை வென்றெடுக்கும் வரையில் இந்தப் போராட்டத்தை தொடருவோம் என்றார்.

