
காணாமல் போனோர் விவகாரம் ; 18,204 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை
காணாமல் போனோர் தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் இதுவரை விசாரணை செய்யப்படாத எஞ்சிய 18,204 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் அடுத்த வருட இறுதிக்குள் முடிக்கப்படும் என என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.
காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை ஆராயும் அலுவலகத்தின் முன்னேற்ற நடவடிக்கை தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை நீதி அமைச்சில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ மேலும் கூறுகையில்,
காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் அலுவலகம் 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் முன்னேற்ற அறிக்கை தொடர்பாக திருப்தியடைய முடியாமல் இருந்தது. அதனால் அதன் நடவடிக்கைகளை முறையாக செயற்திறமையாக்கி இருக்கிறோம். காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராயும் அலுவலகத்துக்கு இதுவரை காணாமல் போனவர்கள் தொடர்பில் 21374 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. . அதில் 6386 முறைப்பாடுகள் முப்படை வீரர்கள் தொடர்பானவை. இந்த 21374 முறைப்பாடுகளில் இதுவரை 3170 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணை முடிவடைந்திருக்கின்றன. ஏஞ்சிய 18,204 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை அடுத்த வருடம் நிறைவடைவதற்குள் முடிப்போம்.
இதேவேளை வடமாகாண மக்களுக்கு ஆவணங்கள் தொடர்பாக இடம்பெற்றுவந்த சட்டப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அந்த மாகாணத்துக்குள் 4 நடமாடும் சேவைகளை முன்னெடுத்தோம். யுத்தத்துக்கு பின்னர் இந்தியாவில் இருந்து சுமார் 12ஆயிரம் பேர் வரை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களுக்கு வந்திருக்கின்றனர். அவர்களுக்கு பல பிரச்சினைகள் இருந்தன. குறிப்பாக காணிகளுக்கு உரித்து இல்லை. பிறப்புச் சான்றிதழ் இல்லை. தேசிய அடையாள அட்டை இல்லை, குறிப்பாக இலங்கையராக வாழ்வதற்கான எந்த ஆவணமும் அவர்களிடம் இல்லாமல் இருந்தது. அதனால் அந்த மாகாண மக்கள் எதிர்கொண்டுவந்த பிரச்சினைகளில் நூற்றுக்கு 90வீத தீர்வை பெற்றுக்கொடுத்தோம்.
அதேபோன்று 35வருட காலத்துக்கு பின்னர் நாங்கள் கடந்த வாரம் கிழக்கு மாகாண மக்களுக்காக விசேட நடமாடும் சேவை ஒன்றை மேற்கொண்டோம். அதன் ஊடாக ஆயிரம் பேர் வரையான மக்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்தோம் என்றார்.

