
வடக்கில் அத்துமீறும் இந்திய மீனவர்களை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்தவில்லை
வடக்கில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய படகுகளை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை என வட மாகாண கடற்படை தலைமையகத்தின் உயர் அதிகாரிஒருவர் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் விவாதிக்கப்பட்டபோதே மேற்படி கடற்படை அதிகாரி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு சில படகுகளில் இந்திய மீனவர்கள் வந்தால் அதனை கட்டுப்படுத்தலாம். ஆனால் அதிகளவில் வருவதனால் எம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனை கட்டுப்படுத்துவதற்குரிய பூரணமான வளங்கள் எங்களிடம் இல்லை. குறிப்பாக ஆளணி வளங்கள் எங்களிடம் இல்லை. எனவே அதனை ஒரு ராஜதந்திர முறையில் கட்டுப்படுத்துவதுதான் சிறந்தது.
எமது கடற்பிரதேசமானமானது பெரிய பிரதேசம் அந்தப் பிரதேசம் முழுவதிலும் கடற்படை செயற்படுகின்றது. எனினும் எம்மால் முயன்றவரை நாங்கள் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துகின்றோம்.
குறிப்பாக கடந்த வருடம் மாத்திரம் 12ஆயிரம் கிலோ கேரளா கஞ்சாவினை கைப்பற்றியுள்ளோம். அதேபோல் போதைப் பொருள் விநியோகம் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தி அதற்குரிய நடவடிக்கையும் எடுத்து வருகின்றோம்.
இந்திய மீனவர்களை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த நாங்கள் இன்று வரை முயற்சிக்கவில்லை. மனிதாபிமானமாக செயற்படுகின்றோம். அதாவது மீன்பிடி தொழிலாளர்களாகவே பார்க்கின்றோம். அதற்காக கடற்படை தேசிய பாதுகாப்பினை செயல்படுத்தவில்லை என நீங்கள் கருத வேண்டாம் என்றார்.
இதற்கு பதிலளித்து அங்கஜன் இராமநாதன் எம்.பி.கூறியதாவது,
உங்களிடம் ஆளணி இல்லை என்றால் ஏன் அதனை ஏற்கனவே தெரியப்படுத்தவில்லை? கடற்படை உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அளவுக்கு உங்களுடைய செயற்பாடு உள்ளது.
வேறு நாட்டின் படகு உள்ளே வருகின்றது என்றால் தேசிய பாதுகாப்பு எந்த அளவில் உள்ளது என்பதை நாங்கள் பார்க்க முடிகின்றது எனவே இந்த விடயம் தொடர்பில் அடுத்த கூட்டத்திற்கு வரும்போது இந்த இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்கு கடற்படையால் என்ன செய்ய முடியும் என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரினார்.

