
கோத்தாவை வீழ்த்திய இன மத நல்லிணக்கத்தை சீர் குலைக்க சதி
கோத்தபாய ராஜபக்ஸவை பதவி விலகச் செய்யும் போராட்டத்தின்போது நாட்டில் உயர் மட்டத்தில் இருந்த இன .மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலேயே தற்போது சில குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன எனவே ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் நடாஷா ஆகியோரின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை அரசு கண்டுபிடிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான நளின் பண்டார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்த நளின் பண்டார எம்.பி மேலும் கூறுகையில்,
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட போது நாட்டில் இன மற்றும் மத நல்லிணக்க உயர் மட்டத்தில் காணப்பட்டன. எவ்வித பேதமும் இன்றி அனைவரும் ஒன்றிணைந்ததனாலேயே அவரை பதவி விலகச் செய்ய முடிந்தது.அந்த இன .மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலேயே தற்போது சில குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மதங்களை நிந்திக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் நடாஷா ஆகியோரின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை முதலில் அரசு கண்டுபிடிக்க வேண்டும். உண்மையில் இதன் பின்னணி என்பது தொடர்பில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நாமும் தேடிக் கொண்டிருக்கின்றோம்
இவ்வாறான கருத்துக்களை வெளியிடுபவர்களிடம் அரசியலை நோக்கமாகக் கொண்ட நிகழ்ச்சி நிரலொன்று காணப்படுகிறது. மீண்டும் மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுகிறது.
சமூகத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயற்படும் இவ்வாறான நபர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். 2019ஐ போன்று அழிவு ஏற்பட இடமளிக்கக் கூடாது என்றார்.