
திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் புத்தர் சிலை
தொல்பொருள் திணைக்களம் போன்றவற்றின் தொடர் ஆக்கிரமிப்புகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வில்லூன்றி கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் புதிதாக புத்தர் சிலை ஒன்றை அமைக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள ‘அஷ்வசும’ நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த
அவர் தொடர்ந்து பேசுகையில்,
இலங்கையில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும்,அதற்கான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் வியாழக்கிழமை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். தொல்பொருள் திணைக்களம்,வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் ஆக்கிரமிப்பு செயற்பாட்டை ஜனதிபதிக்கு எடுத்துரைத்தோம்.
பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வில்லூன்றி கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் புதிதாக புத்தர் சிலை ஒன்றை அமைக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர்.இதற்காக தாய்லாந்து நாட்டில் இருந்து பௌத்த பிக்குகளை அழைத்து வரவுள்ளனர்.
பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு ஒத்துழைப்புடன் செயற்பட நாங்கள் தயாராகவுள்ள நிலையில் ஒரு தரப்பினர் தொடர்ந்து முரண்பாடுகளை தோற்றுவிக்கிறார்கள்.பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது. இனங்கள்,மதங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிப்பது நாங்களா அல்லது சரத் வீரசேகர போன்ற இனவாதிகளா என்பதை அரசாங்கம் ஆராய வேண்டியது அவசியம் என்றார்.

