
இரத்தினபுரியில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நீலக்கல் இன்னும் விலை போகவில்லை
உலகின் மிகப்பெரிய ஒற்றை இயற்கை நீலக்கல் இன்னும் விற்பனை செய்யப்படவில்லையென தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா தெரிவித்தார்.
சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி – 2023 முதல் பதிப்பை அறிவிக்கும் நிகழ்வின் பின்னர், கொழும்பில் நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தக் கண்காட்சி எதிர்வரும் 2023 ஜனவரி 7 முதல் 9 ஆம் திகதிவரை கொழும்பில் இடம்பெறவுள்ளது.
கடந்த ஆண்டு இரத்தினபுரியில் கண்டெடுக்கப்பட்ட 503.2 கிலோ எடையுள்ள இந்த நீலக்கல் கொத்தணி கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளதாக அவர் கூறினார்.
இந்த, உலகின் மிகப்பெரிய நீலக்கல் கொத்தணி கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி, சுவிற்சர்லாந்தில் உள்ள குபிலின் இரத்தினக்கல் ஆய்வகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இந்தக் கல்லுக்கான கொள்வனவாளர் ஒருவரை நாம் இதுவரை கண்டறியவில்லை.எனவே, வாடிக்கையாளர் இந்த கொத்தணியை டுபாய்க்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். டுபாயில் இந்த நீலக்கல் கொத்தணி தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

