
போராட்டங்கள் மேலும் தொடரும்
அரசாங்கத்திற்கு எதிராக மக்களுடன் இணைந்து தொடர்ந்தும் போராட்டங்களை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
அரசாங்கத்தினால் பெருமளவில் பொருட்களின் விலைகளை அதிகரித்து குறைந்த அளவில் விலைகளை குறைத்துவிட்டு நாங்கள் இப்போது விலை குறைத்துவிட்டோம் என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் பொருட்களின் விலைகள் நல்லாட்சி அரசாங்கத்தை விடவும் மூன்று, நான்கு மடங்கு அதிகமாகவே இருக்கின்றது. இதேவேளை மக்கள் மீதான வரிச்சுமைகள் அதிகரிக்கின்றன. இவ்வாறான றிலைமையில் மக்கள் போராட்டங்களை நடத்தும் போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் மக்களை அடக்க முயற்சிக்கின்றது.
அரசியலமைப்பின் ஊடாக மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி நாங்கள் எதிர்க்கட்சிகள் இணைந்து போராட்டங்களை நடத்துகின்றன. நாங்கள் கொழும்பில் புதன்கிழமை போராட்டத்தை நடத்தினோம். வன்முறைகள் இன்றி போராட்டத்தை முன்னெடுத்தோம். ஆனால் அந்தப் போராட்டத்திற்கு எதிரான குழுவொன்று அதனை குழப்புவதற்கு முயற்சித்தது. ஆனாலும் நாங்கள் போராட்டத்தை தொடர்ந்தோம்.
இதேவேளை இது எங்களின் ஆரம்பம் மட்டுமே. மக்களுடன் இணைந்து எமது போராட்டத்தை தொடர்வதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். எதிர்க்கட்சிகள் அனைத்தையும் இணைத்துக்கொண்டு, எதிர்க்கட்சித் தலைவருடன் எமது போராட்டத்தில் வெற்றிப்பெற நடவடிக்கை எடுப்போம் என்றார்.

