
போதையில் பிடியிலிருந்து இளைஞர்களை மீட்க; வடக்கில் களமிறங்கும் அம்மான் படையாணி
வட மாகாணத்தில் போதைப் பொருளுக்கு பல இளைஞர்கள் அடிமையாகிவரும் நிலையில் சமூகத்தையும் எதிர்கால சந்ததியினையும் பாதுகாக்கும் பொருட்டு அம்மான் படையாணி தனது வேலை திட்டங்களை மேற்கொள்ளும் என கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான ஐக்கிய தமிழர் சுதந்திர முன்னணியின் அம்மான் படையாணி தலைமை ஒருங்கிணைப்பாள் ஜெயா சரவணா ஜெயா தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எமது கட்சியின் தலைவராக தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தில் 17 வருடங்கள் தன்னை அர்ப்பணித்த விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மன் செயற்பட்டு வருகிறார்.
அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் எமது கட்சி ஆதரவா அவர்களோடு சந்திப்பு ஒன்றை மேற்கொண்டபோது நமது இளைஞர்களின் எதிர்காலத் திட்டம் பற்றி விரிவாக ஆராய்ந்தோம்.
வட மாகாணத்தில் போதைப் பொருளுக்கு இளைஞர்கள் அடிமையாவது தொடர்பில் ஆராய்ந்த போது அது தொடர்பில் அம்மான் படையணி ஒன்றை உருவாக்கி இளைஞர்களுக்கான வேலை திட்டத்தை செய்யுமாறு எமது கட்சியின் தலைவர் என்னைப் பணித்தார் என ஜெயா சரவணா ஜெயா கூறினார்.
போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு நாம் செயற் படப் போகிறோம் என்றவுடன் நாங்கள் சட்டத்தை கையில் எடுத்து செயற்பட போகிறார்கள் என பலர் நினைப்பார்கள். அவ்வாறு சட்டத்தை கையில் எடுத்து செய்யும் நோக்கம் எமக்கு இல்லை. சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இளைஞர்களை உள்ளடக்கிய வேலை திட்டத்தினை மேற்கொள்ள உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

