
கோத்தபாய எங்கு சென்றாலும் நீதிக்கான போராட்டம் தொடரும்
இனப்படுகொலையாளியும், சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியுமாகிய கோத்தபாய ராஜபக்ச எந்த நாட்டுக்கு சென்றாலும், உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் அவரை கைது செய்யக் கோரும் நீதிக்கான போராட்டம் தொடரும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
இரவோடு இரவாக நாட்டை விட்டு வெளியேறி மாலைதீவூடாக சிங்கப்பூரில் சென்று, அங்கிருந்து தற்போது தாய்லாந்துக்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன் தாய்லாந்துக்கு வந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயவை கைது செய்ய தாய்லாந்து அரசை வலியுறுத்தும் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சிங்கப்பூர் சட்டமா அதிபரை நோக்கி முன்னெடுக்கப்பட்டிருந்த கையெழுத்துப் போராட்டம், தாய்லாந்து சட்டமா அதிபரை நோக்கியதாக மாற்றம் செய்யப்படுவதோடு, முன்னராக பெறப்பட்ட கையொப்பங்கள் நீதிக்கான நோக்கத்தின் அடிப்படையில் இதனோடு இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த http://tgte-us.org/ இணையப்பக்கத்துக்கு சென்று (தொடுப்பு : https://tgte-us.org/?page_id=4340 ) இலகுவாக ஒப்பமிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, நீதிக்கான போராட்டத்தில் அனைவரையும் பங்கெடுக்குமாறு கோரியுள்ளது.
இனப்படுகொலை, மானிடத்திற்கெதிரான குற்றம் மற்றும் போர்க் குற்றங்களைப் புரிந்ததற்கான நம்பத்தகுந்த சாட்சியங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிக்கைகள் கூறியுள்ளன.
1948ம் ஆண்டு இன அழிப்புச் சட்டத்தின் கீழும், 1949ம் ஆண்டு ஜெனீவாச் சட்டங்களின் கீழும் மற்றும் 1977ம் ஆண்டு Additional protocol 1 இன் கீழும் சர்வதேச சட்டங்களின் கீழ் கையெழுத்துப் போராட்டத்தின் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

