வடக்கில் இராணுவ அடாவடித்தனம்; ஜனாதிபதியின் கீழ் இராணுவம் இல்லையா?

வடக்கில் இராணுவ அடாவடித்தனம்; ஜனாதிபதியின் கீழ் இராணுவம் இல்லையா?

வடக்கில் இராணுவ அடாவடித்தனம் தொடருமானால் அரசாங்கத்துக்கு புறம்பாக நாட்டில் இராணுவ ஆட்சி இடம்பெறுகிறது என்பதை புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்மாவட்ட எம்.பி. யான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் சிம்மாசன உரை மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

ரணில் விக்கிரமசிங்க தன்னை நியாயமுள்ளவராக அடையாளப்படுத்தி செயற்பட்டால், அவர் சிறந்த ஜனாதிபதியாக இருப்பார் அவர், தமிழர்களுடைய இனப்பிரச்சினை தீர்வில் முழுமையாக ஈடுபட்டால், நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் .ஆனால் ஜனாதிபதி கொள்கை விளக்க உரையை ஆற்றிக்கொண்டிருக்கும்போது, படையினரால் கிளிநொச்சி மாவட்டத்தில் கட்டுமீறிய அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.ஜனாதிபதியின் கீழ் இராணுவம் இல்லையா என்று எண்ண தோன்றும் அளவிற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரது அடாவடித்தனம் அதிகரித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகி நகர் புன்னைநீராவியில் உள்ள பாற்கடல் பூங்கா முன்பள்ளியின் பெயர் மற்றும் அதே பிரதேசத்தில் உள்ள மயில்வாகனபுரம் பகுதியில் உள்ள மயூரன் முன்பள்ளியின் பெயர் இராணுவத்தினரது தலையீட்டுடன் வீரமுத்துக்கள் முன்பள்ளி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இந்த முன்பள்ளிகளுக்கு இராணுவ இலட்சினைகளுடன் பெயர் பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன இந்த முன்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இராணுவத்தின் சிவில் பிரிவின் பெயர் பொறிக்கப்பட்ட ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன. இச்செயற்பாடு கிளிநொச்சி மாவட்டத்தின் சுயாதீன கல்வி நிலையை கேள்வி நிலைக்கு உள்ளாக்கியுள்ளது.

வடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் 481 பேர் முன்பள்ளி ஆசிரியர்கள் படையினரின் சிவில் படைப்பிரிவின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு படையினராலேயே வேதனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன .

உலகில் எங்குமில்லாத வகையில் சிறுவர் உரிமைகளை முடக்கும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் முன்பள்ளி பாடசாலைகளை நிர்வகிப்பது பிறிதொரு இன அடக்கு முறையாக கருதப்படும்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ சின்னம் பொருந்தி சீறுடை தரித்தவர்கள் முன்பள்ளி பாடசாலைகளில் நிர்வாக கட்டமைப்பில் தலையிடுவது எமது பண்பாட்டு மற்றும் கல்வி முறைமையை பாதிப்பிற்குள்ளாக்கும் செயற்பாடாக உள்ளது.

எனவே ரணில் விக்கிரமசிங்க, நியாயமான ஒருவராக இருந்தால், அவர் இவ்வாறான பிரச்சினைகள் உட்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுக்காணவேண்டும்.இல்லையென்றால் இராணுவத்துக்கு பயந்தே நாட்டில் ஆட்சி நடத்தப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கும். அத்துடன் அரசாங்கத்துக்கு புறம்பாக நாட்டில் இராணுவ ஆட்சி இடம்பெறுகிறது என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கும்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )