
லலித், குகன் வழக்கு: கோட்டாவின் சாட்சியம் தொடர்பில் ஏப்ரல் 28ஆம் திகதியன்று கட்டளை!
காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான வழக்கில், கோட்டாபய ராஜபக்ஷவின் சாட்சியத்தை எத்தகைய முறையில் பெறுவது என்பது தொடர்பான கட்டளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வழங்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2011ஆம் ஆண்டு மனித உரிமைகள் தினமான டிசம்பர் மாதம் 10ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டனர். இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டு, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் திகதி அறிக்கையிடப்பட்டது. அத்துடன், லலித் மற்றும் குகன் ஆகியோரின் உறவினர்களால் 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாணையின்போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் விசாரணைகள் ஆரம்பமாகின. கடந்த 2017ஆம் ஆண்டு மனுவின் சாட்சியாளர்கள் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் இணைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளின்போது, கோட்டாபய ராஜபக்ஷ மன்றில் தோன்றி சாட்சியமளிக்குமாறு உத்தரவிடப்பட்டது. எனினும், பாதுகாப்புக் காரணங்களுக்காக தன்னால் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்து சாட்சியம் வழங்க முடியாது என்று கோட்டாபய ராஜபக்ஷ மறுத்து வந்தார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டபோது, யாழ்ப்பாணத்துக்கு வரமுடியாதெனில் அது தொடர்பில் சத்தியக் கடதாசியை வழங்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ தரப்புக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியது. இதற்கமைய கோட்டாபய சத்தியக் கடதாசியை தாக்கல் செய்திருந்த நிலையில், இரு தரப்பையும் எழுத்துமூல சமர்ப்பணங்களை தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் கடந்த தவணையின்போது அறிவுறுத்தல் வழங்கியது.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்காக எடுக்கப்பட்டபோது, இந்த எழுத்துமூல சமர்ப்பணங்கள் தொடர்பான கட்டளை ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
லலித், குகன் தரப்பினரின் சார்பில் சட்டத்தரணிகளான எஸ்.கே.புரந்திரன், லக்சயன் ஆகியோரும், கோட்டாபயவின் தரப்பில் சட்டத்தரணி சுரங்க பெரேராவும் முன்னிலையாகியிருந்தனர்.

